11 January 2014

திருவருட்பா

இன்றைக்கு வைகுண்ட ஏகாதசி. திரு வள்ளலார் பாடியுள்ள பாடல்கள் முருகப் பெருமானையும், சிவபெருமானைப் பற்றியுமே ஆகும். திருமாலைப் பாடியுள்ள பாடல்கள் குறைவானவையே. இன்று அற்புதமான ஒரு பாடல் தியானத்தில் இடம் பெறுகிறது.

வள்ளலார் இறை அனுபவம் பெற்றபின் பாடிய பாடல்களில் 'அனுபவமாலை' ஒன்று. இதில் நூறு முத்துக்கள் உள்ளன.

சிவபோக அனுபவம் என்பது சொல்லுக்கு எட்டாதது ஆகும். எனவே ஒரு தலைவி தன் தோழியிடம் கூறுவது போல் கற்பனைப் பாத்திரங்களால் தன் இறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் வள்ளலார்.

புராணக்கதைகள் திருமால் மோகினி அவதாரம் எடுத்ததைச் சொல்கின்றன. அதனால் திருமால் சிவபெருமானின் மனைவி ஆகிறார். வள்ளலார் தன்னைத் தலைவியாகவும், சிவபெருமானைத் தன் தலைவனாகவும் பாடுகின்றார்.

கீழ்வரும் பாடலைப் படியுங்கள்:

தாழ்குழல்நீ  ஆண்மகன்போல் நாணம் அச்சம்  விடுத்தே
                  சபைக்கேறு கின்றாய்என் றுரைக்கின்றாய் தோழி
வாழ்வகைஎன்  கணவர்தமைப்  புறத்தணைந்தாள் ஒருத்தி
                   மாலெனும்பேர் உடையாள்ஓர் வளைஆழிப் படையாள்
ஆழ்கடலில் துயில்கின்றாள் மாமணிமண் டபத்தே
                   ஆள்கின்றாள் ஆண்மகனாய்  அறிந்திலையோ அவரைக்
கேழ்வகையில் அகம்புணர்ந்தேன் அவர்கருணை அமுதம்
                   கிடைத்ததுநான் ஆண்மகனா கின்றததி சயமோ.

தலைவி  தன் தோழியிடம் சொல்கிறாள்,'தோழி, என் கண்மணி அனையார், என் உயிர் நாயகனார்
அருட் சோதி ஒளி வீச, நாத ஒலிகள் மிகுதியாய் ஒலிக்க, திருமேனியில் தெய்வ மணம் கமழ வந்து கொண்டிருக்கிறார். கற்பூர விளக்கை எடுத்து வா,'
தோழி:  'என்ன நீ, சிறிதும் பெண்களுக்குரிய அச்சமும்,  நாணமுமில்லாமல் எல்லோருக்கும் முன்னால் உன் கணவரை நோக்கிச் செல்கின்றாய்.'
தோழி  உனக்கு ஒன்று தெரியுமா? நான் செல்லாவிட்டால்............!
என் கணவரை  சில நாட்களுக்கு முன் வேறு ஒரு பெண் அணைத்துக் கொண்டாள்! அவள் பெயர் என்ன தெரியுமா? 'மால்' என்ற பெயர் அவளுக்கு! சங்கு, சக்கரம் என்ற இரு படைகளை கையில் ஏந்தியிருக்கிறாள்.
ஆழ்கடலில் தூங்குகின்றவள்! அழகுடைய பெரிய மணிமண்டபத்தில் ஆண்மகனாய்த் தோன்றி ஆட்சி செய்கின்றாள். நான் முன்னே போகாவிட்டால் என்ன ஆகும் சொல்? அதனால்.....
என் உள்ளத்தே உள்ள ஒளிமயமான அவரோடு இரண்டறக் கலந்து அவருடைய கருணைக்கு ஆளானேன். எனவே நான் ஆண்மகனுக்குரிய பண்பைப் பெற்றது என்ன அதிசயம்?

இங்கே வள்ளலார் தான் சிவத்தோடு இரண்டறக் கலந்ததை எடுத்துக் கூறுகின்றார்.
திருமால் மோகினி அவதாரம் எடுத்தது இங்கே கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு வள்ளல் பெருமான் தானும் திருமாலும், சிவபெருமானும் ஒன்றேயான தன் அனுபவத்தை அழகுறப் பாடுகிறார். அனுபவமாலைப் பாடல்கள் ஒவ்வொன்றும் இறை அனுபவம் தரவல்லவை.



















No comments:

Post a Comment