30 April 2014

A passage from (SAVITRI) - SriAurobindo

.....................''Remember why thou cam'st:
Find out thy soul, recover thy hid self,
In silence seek God's meaning in thy depths,
Then  mortal nature change to the divine.
Open God"s door, enter into his trance.
Cast thought from thee, that nimble ape of Light:
In  his tremendous hush stilling thy brain
His vast Truth wake within and know and see.
Cast from thee, sense that veils thy spirit's sight:
In the enormous emptiness of thy mind
Thou shalt see the Eternals body in the world,
Know him in every voice heard by thy soul,
In the world's contacts meet his single touch;
All things shall fold thee into his embrace.''
               - Book 7: The Book of Yoga

29 April 2014

ஊதூது சங்கே

 கைவிட மாட்டான் என்று ஊதூது சங்கே
கனக சபையான் என்று ஊதூது சங்கே

பொன்னடி தந்தான் என்று ஊதூது சங்கே
பொன்னம் பலத்தான் என்று ஊதூது சங்கே

அச்சம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே
அம்பல வாணன் என்று ஊதூது சங்கே

பொன் உருத் தந்தான் என்று ஊதூது சங்கே
பொற்சபை அப்பன் என்று ஊதூது சங்கே

சிவமாக்கிக் கொண்டான் என்று ஊதூது சங்கே
சிற்றம் பலத்தான் என்று ஊதூது சங்கே.
                        **************

அருட்பெருஞ் சோதி தனிப் பெருங்கருணை

28 April 2014

அம்பலத்தரசே அருமருந்தே

அம்பலத் தரசே அருமருந்தே
ஆனந்தத் தேனே அருள் விருந்தே
பொதுநடத் தரசே புண்ணியனே
புலவரெலாம் புகழ் கண்ணி யனே
மலைதரு மகளே மடமயி லே
மதிமுக அமுதே இளங்குயி லே
ஆனந்தக் கொடியே இளம்பிடியே
அற்புதத் தேனே மலைமா னே
சிவசிவ சிவசிவ சின்மய தேஜா
சிவசுந்தரகுஞ் சிதநடராஜா
                ------------
திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

27 April 2014

நல்ல மருந்து - 2

வைத்தீசுவரன் கோயில்

பிறப்பை யொழிக்கு மருந்து - யார்க்கும்
      பேசப் படாத பெரிய மருந்து

இறப்பைத் தவிர்க்கும் மருந்து - என்னுள்
       என்றும் மதுரித்து இனிக்கும் மருந்து (நல்ல)

மாலயன் தேடும் மருந்து - முன்னர்
      மார்க்கண்ட ரைக்காக்க வந்த மருந்து

காலனைச் சாய்த்த மருந்து - தேவர்
       காணுங் கனவினுங் காணா மருந்து (நல்ல)

                                                 - வள்ளலார்


26 April 2014

நல்ல மருந்து -1

வைத்தீசுவரன் கோயில்

நல்ல மருந்து இம்மருந்து-சுகம்
நல்கும் வைத்திய நாதமருந்து

அருள் வடிவான மருந்து - நம்முன்
அற்புதமாக அமர்ந்த மருந்து

இருளற ஓங்கும் மருந்து - அன்பர்க்கு
இன்குருவாக இருந்த மருந்து

சஞ்சலம் தீர்க்கும் மருந்து - எங்கும்
தானே தானாகித் தழைக்கும் மருந்து (நல்ல)

சுகத்தைத்தரும் வைத்தியநாதனாகிய மருந்து நல்ல மருந்தாகும்.

25 April 2014

மகாதேவமாலை


என்னுயிர்நீ யென்னுயிர்க்கோ ருயிருநீ யென்
  இன்னுயிர்க்குத்  துணைவனீ யென்னை யீன்ற
அன்னைநீ யென்னுடைய வப்பனீ யென்
  அரும்பொருணீ யென்னிதயத் தன்புநீ யென்
நன்னெறிநீ யெனக்குரிய வுறவுநீ யென்
  நற்குருநீ யெனைக்கலந்த நட்புநீ யென்
றன்னுடைய வாழ்வுநீ யென்னைக் காக்குந்
  தலைவனீ கண்மூன்று தழைத்த தேவே

எல்லா உறவுகளும் இறைவனே, என்று வாழ்வது இந்த உலகில் எல்லோருக்கும் முடியுமா?
வள்ளல் பெருமான் இறைவனிடம்  கொண்ட பக்தியும், பரிபூரண சரணாகதியும் எண்ணி எண்ணி இன்புறத்தக்கன. எப்படி வனைந்து வனைந்து இறைவனை ஆராதிக்கிறார் பாருங்கள்.

இறைவனே நீயே என் உயிர்.
அந்த உயிருக்கு உயிராய் இருப்பவனும் நீயே!
என் உயிருக்கு உயிராய் விளங்கும் என் இன்னுயிருக்குத்  துணைவன் நீ.
உமையம்மையை இடப்பாகம் கொண்ட அம்மையப்பனல்லவோ நீ?
ஆதலின் என்னை ஈன்ற தாயும், தந்தையும் நீயே!
மிக அரிதாக எனக்குக் கிடைத்த செல்வம் நீ,
என் இதயத்தினின்றும் பொங்கிப் பெருகுகின்ற அன்பும் நீயே,
என்னுடைய சன்மார்க்க நெறியும் நீ,
என் அகத்திலே பிரிவறக் கூடியிருக்கும் உறவும் நீ,
என் ஆன்மாவின் பக்குவம் கண்டு  அருள்நெறி காட்டும் சற்குரு நீ,
என்னோடு இரண்டறக் கலந்த சினேகிதனும் நீ,
என் பேரின்ப வீட்டின் வாழ்வு நீ,
என்னை எப்பிறப்பிலும், எவ்வுலகிலும்  பாதுகாக்கின்ற தலைவன் நீ,
முச்சுடர் விழிகளும் தழைக்கப் பெற்ற தேவனே. உம்மை வணங்குகிறேன்.

அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை.













24 April 2014

மகாதேவமாலை

(தேவர்களுக்கு எல்லாம் தேவனாக, பெருந் தலைவனாக, விளங்கும் பரம்பொருளே மகாதேவன்.
மகாதேவன் மீது பாடிய பாமாலை ஆதலின் மகாதேவமாலை எனப்படுகிறது)

                                          காப்பு

கருணைநிறைந்  தகம்புறமுந்  துளும் பிவழிந்
   துயிர்க்கெல்லாம்  களைகணாகித்
தெருள்நிறைந்த இன்பநிலை வளர்க்கின்ற
   கண்ணுடையோய்!  சிதையா ஞானப்
பொருள்நிறைந்த  மறையமுதம் பொழிகின்ற
   மலர்வாயோய்! பொய்ய னேன்றன்
மருள்நிறைந்த மனக்கருங்கற் பாறையுமுட்
   கசிந்துருக்கும் வடிவத் தோயே!

மஹாதேவனாகிய சிவபெருமானின் வடிவம் எத்தகையது? திருவருட்பாவின் அநேக பாடல்களில்
இறைவனின் வடிவழகை வள்ளலார் சொல்லியிருக்கிறார். வள்ளலார் இறைவனின் தரிசனம் பெற்றவர் ஆதலின் அவர் கண்கள் வழியே நாமும் தேவாதி தேவனை தரிசிப்போம்.

இறைவனுடைய கண்கள் எத்தகையவை? ஓவியர் கேசவ் அவர்களின் கண்ணன் ஓவியங்களில் 'கண்கள்' அப்படியே உயிர் பெற்றிருக்கும். கருணையும், அமைதியும் நிரம்பி வழியும். எப்படி இவ்வாறு கண்களுக்கு உயிர் கொடுக்கிறார் என நான் ஆச்சர்யப்பட்டதுண்டு. இந்தப் பாடலைப் படித்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது அவருடைய ஓவியங்களே! வள்ளலார் காட்டுவது சொல்லோவியம்!

இறைவனுடைய கண்களில் கருணை, இரக்கம் நிரம்பி வழிகிறதாம்! உள்ளே நிறைந்து இடமில்லாமல் வெளியேயும் பால் பொங்குவது போல பொங்கி வழியும் கருணை. அந்தக் கருணை என்ன செய்கிறது?
இவ்வுலக உயிர்களுக்கெல்லாம் ஆதரவு காட்டி அணைக்கிறது. அதனால்  மனத்தெளிவு ஏற்படுகிறது.
அதுமட்டுமா? இன்பத்தைத் தரவில்லை, வளர்க்கிறதாம்! 'இன்ப நிலை வளர்க்கின்ற கண்ணுடையோய்' என்கிறார் வள்ளல். மனிதர்களுக்கு இரு கண்கள்! மகாதேவனுக்கோ கருணை செய்யும் முக்கண்கள்!

அவனுடைய வாய் எத்தகையது? என்றும் அழியாத ஞானப் பொருள் நிறைந்த வேதங்களின் ஆழ்ந்த உட்பொருளாகிய அமிழ்தத்தை பொழிகின்ற மலர்வாய். வேதங்கள் எவை? திருவருட்பா, திருவாசகம், திருமந்திரம், தேவாரம் எல்லாம் வேதங்கள்தான்.

நம் கண்களால் காண இயலாத 'இன்பநிலை வளர்க்கின்ற கண்ணுடையவன், மறையமுதம் பொழிகின்ற மலர் வாயனு'டைய வடிவம் எப்படி இருக்கும்?

உண்மை பேசியே அறியாத மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். ஒரு பொய் நூறாக, ஆயிரமாக வளரும். அது இயல்பாகிவிடுகிறது. ஆனால் தாங்கள் பொய் பேசுவதை உணராதவர்களாக, அன்பு, கருணை, இரக்கம் அற்றவர்களாக கருங்கற்பாறை போல இறுகிக் கிடக்கும் மனமுடையவர்களைப் பற்றி தினமும்
படிக்கிறோம். தன்னம்பிக்கை அற்றவர்கள்தான் பயம் காரணமாக பொய் பேசுவார்கள். அகங்கார மயக்க
முடையவர்களாக அவர்கள் இருப்பார்கள். அத்தகைய பாறை மனமுடையவர்களையும் மனம் உருகிக் கசிந்து, நெகிழ்ந்து போகும் படிச் செய்யவல்ல வடிவம் உடையவன் இறைவன்.

இவ்வுலக உயிர்களுக்கு எல்லாம்  இன்பம் தரும் துணையாக  இருக்கும் கண்களும், உயர்ந்த செம்மொழி பேசும் திருவாயும், கற்பாறையையும் 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க' உருக்கும்
வடிவமும் உடையவன் இறைவன்.

அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.












20 April 2014

அபயத் திறன்

(அபயம் வேண்டுதற்கான தீய குணம் செயல்களால் விளையும் தீமைகளை எடுத்துக் கூறி அஞ்சவேண்டா என அபயம் அளிக்குமாறு வேண்டுதல்) அபயம் - அடைக்கலம்; புகல்

ஊன்பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும்
    ஊக்கமும் உண்மையும் என்னைத்
தான்பெறு தாயும் தந்தையும் குருவும்
    தனிப்பெருந் தெய்வமுந் தவமும்
வான்பெறு பொருளும் வாழ்வும்நற் றுணையும்
     மக்களும் மனைவியும் உறவும்
நான்பெறு நண்பும் யாவும்நீ என்றே
     நம்பினேன் கைவிடேல் எனையே.

1என் உடலிலே உள்ள என் உயிரும்,
2 உணர்ச்சியும்,
3 அன்பும்,
4 ஊக்கமும்,
5 உண்மையும்,
6 என்னைப் பெற்ற தாயும், தந்தையும், குருவும்,
7 தனக்கு நிகரில்லாத தெய்வமும்,
8 தவமும்,
9 பெருமைதரும் செல்வமும்,
10 வாழ்வும்,
11 நல்ல துணையும்,
12  மக்களும்,
13 மனைவியும்,
14 உறவும்,
15 நண்பனும்,
16 மற்று எல்லாமும்
நீயே
என்றே நம்பினேன்
கைவிடேல் எனையே,
கைவிடேல் எனையே, கைவிடேல் எனையே.

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி.










19 April 2014

பாதமலர்

தாதையாம் என்னுடைய தாயாம்என் சற்குருவாம்
மேதையாம் இன்ப விளைவுமாம் - ஓது
குணவாளன் தில்லைஅருட் கூத்தன் உமையாள்
மணவாளன் பாத மலர்

என்னுடைய தந்தையும், தாயும், சற்குருவும், ஞானமுதல்வனும் யார்? எனக்கு இன்பமளிக்கும் பொருளாகி விளங்குவது எது?

பெரியோர்கள் எடுத்துச்சொல்லும் எட்டு வகை நற்குணங்களைஉடையவன்,
தில்லைச் சிதம்பரத்தில் அருளாகிய கூத்தால் அன்பர்களுக்கு ஆனந்தத்தை அருள்பவன்,
மலைமகளாகிய உமையம்மையின் மணவாளன்.
அவனுடைய திருவடித் தாமரைகள், திருப்பாத மலர்களே எனக்கு அனைத்தும் ஆகும். அத்திருவடிகளில் சரண்புகுந்தேன்.
ஐந்து அங்கங்களும் தரையில் படுமாறு வீழ்ந்து வணங்கும்போது, இறைவனின் திருவடிகளை தரிசிக்கும் போது கிடைக்கும் ஆனந்தத்திற்கு ஈடு இணை ஏது? நிஜமாகவே அப்பாத மலர்களின் தரிசனம் கிடைக்கப் பெற்றால்? கிடைக்கும்!

'ஆனந்தானுபவம்,' என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளன பத்து பாடல்கள்.
வள்ளல் பெருமான் இறைவனின் தரிசனம் பெற்ற ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது, சிவபெருமானின் பாதமலர் என்று சொல்லாமல்,
'உமையாள் மணவாளன் பாதமலர்,
சிவகாமவல்லி மகிழ் மாப்பிள்ளை பாதமலர்,
சிவகாம சுந்தரியை மாலை இட்டான் பாதமலர்,'
என்றெல்லாம் போற்றிப் புகழ்ந்து நம்மையும் பரவசப்படுத்துகிறார்.





18 April 2014

ஆனந்தானுபவம்

எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
உண்ணுகின்றேன் உண்ண உண்ண ஊட்டுகின்றான் நண்ணுதிருச்
சிற்றம் பலத்தே திருநடஞ்செய் கின்றான்என்
குற்றம் பலபொறுத்துக் கொண்டு.

திருச்சிற்றம்பலத்தே திருநடனம் புரியும் சிவபெருமானின் கருணையை எண்ணி எண்ணி வியக்கின்றேன்.
என்னுடைய பல குற்றங் குறைகளை யெல்லாம் பொறுத்துக் கொண்டு எனக்கு அருள் செய்கிறான்.
நான் பலவற்றையும் நினைக்கின்றேன்.  நினைத்ததை எல்லாம் நிறைவேற்றுகின்றான்.
நான் உண்பனவற்றை மேலும் மேலும் உண்ணும்படி ஊட்டுகின்றான்.
அவனுடைய திருவருட் கருணையை என்ன சொல்லி போற்றுவேன்! 

17 April 2014

தணிகை மலையைச் சாரேனோ?

தணிகை மலையைச் சாரேனோ
         சாமி அழகைப் பாரேனோ
பிணிகை யறையைப் பேரேனோ
        பேரா அன்பு கூரேனோ
அணிசெய் அருள்நீர் ஆரேனோ
        ஆறாத் தாகம் தீரேனோ
பணிசெய் தொழும்பில் சேரேனோ
         பார்மீ திரங்கும் நீரேனே

முருகப் பெருமானிடம் காதல் கொண்ட நங்கை ஒருத்தி பாடுவதாக அமைந்த பாடல் இது.
தணிகை மலை நாதனிடம் காதல் கொண்டவள் சொல்கிறாள், தணிகை மலைக்கு இப்போதே போகவேண்டும், முருகப் பெருமானின் திருவழகைக் கண்குளிரக் காண வேண்டும். அவனிடம் நான் கொண்ட காம நோயாகிய துன்பத்தை போக்கிக் கொள்ள வேண்டும்.அவனிடம் மிகுந்த காதல் கொள்ள வேண்டும்.
முருகப் பெருமானுக்கு அணிகலன் அன்பருக்கு அருளுதல். பொங்கிப் பெருகும் அவனுடைய அருளாகிய நீரை அருந்தி அவன் மீது நான் கொண்ட அன்பாகிய தாகத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அவனுடைய அடியார்கள் கூட்டத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும். இவ்வுலக மக்களிடம் அன்பும் கருணையும் உடைய தணிகை ஈசனே அருள் செய்வாயாக.





16 April 2014

நற்றுணையாவது நமச்சிவாயமே

நற்றுணை விளக்கம்

காவின் மன்னவன் எதிர்க்கினும் காமன்
கணைகள் ஏவினும் காலனே வரினும்
பூவின் மன்னவன் சீறினும் திருமால்
போர்க்கு நேரினும் பொருளல நெஞ்சே
ஓவில் மாதுயர் எற்றினுக் கடைந்தாய்
ஒன்றும் அஞ்சல்நீ உளவறிந் திலையோ
நாவின் மன்னரைக் கரைதனில் சேர்த்த
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

அடடா, என் மனமே எதற்காக ஓய்வில்லாமல் துயரடைகிறாய்? என்ன துன்பம் உனக்கு? எதற்காக பயப்படுகிறாய்? உனக்குத் தெரியாதா உன்னைக் காப்பாற்றும், சதா உனக்குத் துணையாகும் நமச்சிவாய மந்திரம் உன்னோடு இருக்க அஞ்சவேண்டாம் என்று? முன்னொரு காலத்தில் திருநாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் தூக்கி எறிந்த போது அவரைக் கரையில் சேர்த்தது நமச்சிவாய மந்திரம் என்பதை அறிவாய்.
தேவர் உலகின் மன்னன் இந்திரனே எதிர்த்தாலும்,
மன்மதன் தன் கணைகளை ஏவி காம மயக்கமுறச் செய்தாலும்,
காலனே வந்தாலும்,
தாமரைமலரினான் பிரமனே சீறினும்,
திருமால் போரிட வந்தாலும் நமக்கு ஒரு பொருட்டல்ல!
நமக்குத் துணையாய் இருக்கும் நமச்சிவாய மந்திரம் இருக்க பயம் ஏன்?

நமச்சிவாய சிவாய சிவ நமச்சிவாய சிவாய சிவ நமச்சிவாய.

 







15 April 2014

அருளின்றி வாடுதல் அழகோ?

நீலக் களங்கொண்ட நீடொளியே நீள்கங்கை
கோலச் சடைக்கணிந்த  கோமளமே - ஞாலத்தில்
அந்தோ சிறியேன் அருளின்றி வாடுவது
சந்தோட மோநின் றனக்கு.

ஆலகால விஷத்தை அருந்தியதால் நீலநிறமாகக் காணப்படுகிற கழுத்தையுடைய  ஒளிப்பிழம்பே.
கங்கையை அழகிய சடையிலே தரித்த அழகனே.
இவ்வுலகில் நீ அருள் செய்யாத காரணத்தால் சிறியேனாகிய நான் வாடுகிறேன்.
நான் வருந்துவது உனக்கு சந்தோஷமா? சொல்வாயாக.

கருணையுடன் எனக்கு அருள் புரிவாயாக.

14 April 2014

என்ன கைமாறு செய்வேன்?

சாற்றுவேன் எனது தந்தையே தாயே
   சற்குரு நாதனே என்றே
போற்றுவேன் திருச்சிற் றம்பலத் தாடும்
   பூரணா எனஉல கெல்லாம்
தூற்றுவேன் அன்றி எனக்குநீ செய்த
   தூயபேர் உதவிக்கு நான் என்
ஆற்றுவேன் ஆவி உடல்பொருள் எல்லாம்
     அப்பநின்  சுதந்தரம் அன்றோ.
                                   
இறைவனிடம் தாம் பெற்ற பேற்றை, அருளை அடிகளார் வியப்போடு எடுத்துக் கூறுகிறார்.
இறைவனே,
என்னுடைய தந்தையும்,தாயும், ஞான நல்லாசிரியனும் நீயே எனக் கூறி நின்னைத் துதிப்பேன். திருச்சிற்றம்பலத்தில்  ஆடல் புரியும் பரிபூரணனே என நின்னைப் போற்றுவேன்.
நீ எனக்கு அருள் செய்யாவிட்டால் உலகெலாம் அறியத் தூற்றுவேன்.
ஆயின் நீ எனக்கு செய்த தூய்மையான பேரருளாகிய உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்யமுடியும்? என்னுடைய உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும்  உனக்கே என சமர்ப்பித்து விட்டபின் எனக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது? எல்லாம் உனதன்றோ?

அருட்பெருஞ் சோதி தனிப்பெருங்கருணை. இறைவனுடைய திருவருள் அனைவரிடமும் நிறைவதாக.

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.






13 April 2014

பிரிவுமுண்டோ?

போக  மாட்டேன்  பிறரிடத்தே  பொய்யிற்  கிடந்து  புலர்ந்துமனம்
வேக   மாட்டேன்  பிறிதொன்றும்  விரும்ப  மாட்டேன் பொய்யுலகன்
ஆக    மாட்டேன்   அரசேஎன்  அப்பா  என்றன் ஐயாநான்
சாக    மாட்டேன்   உனைப்பிரிந்தால் தரிக்க  மாட்டேன்  கண்டாயே.

அரசே, என் தந்தையே, என் ஐயா,
இவ்வுலக மக்கள் எவரிடமும்  உதவி நாடிப் போக மாட்டேன்.
பிற மாந்தரின் பொய் வார்த்தைகளில் சிக்கி, மனமானது ஈரம்வற்றிப் போய்
நொந்து போக மாட்டேன்,
உன் திருவருளைத் தவிர இவ்வுலகில் எதையும் விரும்ப மாட்டேன்,
பொய்மை நிறைந்த இவ்வுலக மாந்தரில் ஒருவனாக மாட்டேன்,
ஐயனே நான் இறவேன்,
உன்னைப் பிரிந்தால், உன் நினைப்பினின்று என்மனம் அகன்றால் கணமும் உயிரோடு
இருக்க  மாட்டேன் அறிந்து கொள்வாய்.

அருட்பெருஞ் சோதி தனிப்பெருங்கருணை!





12 April 2014

கண்குளிரக் காட்சிதருவாய்

இறைவனைக் காண வேண்டும் என்ற ஆசை இந்த உலகில் பிறந்த எல்லோருக்குமே உண்டு.
இறைவன் பார்க்க எப்படி இருப்பான் என்று யாருக்காவது தெரியுமா? அவரவர் கற்பனைக்கேற்ப
பல உருவங்களை நாம் கடவுளுக்குக் கொடுத்து அலங்கார ஆராதனைகள் செய்து ஆனந்தப்படுகிறோம்.
பக்தியின் முதற்படி உருவ வழிபாடு!

Image Courtesy: Google Andavar


வள்ளல் பிரானுக்கோ சிவபெருமான் மீது பக்தி. 'பரசிவம்  சின்மயம் பூரணம் பரசுகம் தன்மயம் சச்சிதானந்தம்' என 'திருவடிப் புகழ்ச்சி'யில் உருவமற்ற சிவத்தைப் பாடுகிறார். சிவபெருமான் எப்படி இருப்பார்?அந்தக் காட்சியைப் பாருங்கள்............



அதோ இளமையுடைய எருது வருகிறது. அதன் மேல் நறுமணம் கமழும் மென்மையான கூந்தலை உடைய உமையம்மை ஒரு பாகத்தில் அமர்ந்திருக்க கம்பீரமாக சிவபெருமான் காட்சி அளிக்கிறார்!

சிவந்த பவளத்தால் ஆன ஒரு சிறுமலையை அன்றோ காண்கின்றேன்!
இறைவனுடைய அருள் என்னை ஆனந்தமடையச் செய்கிறதே!
நன்கு பழுத்த சுவைமிக்க கனியாய்  இனிக்கின்றானே  முக்கண்ணுடைய தேவன்!
மூப்பும் அழிவும் அற்ற நிலம், நீர், தீ, காற்று, வான் முதலியவற்றுக்கு அரசன்,
என் ஆருயிர்க்கு காவலனான சம்பு, சங்கரன்,
வெண்பனி போர்த்திய கயிலையின் விரும்புவார் விரும்பியவற்றை அளிக்கும் கற்பகத் தரு!
சிவபெருமான்!

 உமையொரு பாகனாய் 'மழவிடைமேல்  வருங் காட்சி'யை வழங்குவாய் என அந்தக் காட்சியையே நம் கண்முன்னால் காட்டுகிறார் வள்ளல் பெருமான்.

 நான்காம் திருமுறைப் பாடலைப் படித்து இன்புறுங்கள்.

''செம்பவளத் தனிக்குன்றே அருளா னந்தச்
செழுங்கனியே முக்கணுடைத் தேவே மூவா
அம்புவிநீர் அனல்வளிவான் ஆதியாய
அரசேஎன் ஆருயிர்க்கோர் அரண மாகும்
சம்புசிவ சயம்புவே சங்க ராவெண்
சைலம்வளர் தெய்வதவான் தருவே மிக்க
வம்பவிழ்மென் குழல் ஒருபால் விளங்க ஓங்கும்
மழவிடைமேல் வருங்காட்சி வழங்கு வாயே.

அருட்பெருஞ் சோதி தனிப்பெருங் கருணை! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!





11 April 2014

கைவிடேல் எனையே

நம்முடைய உடம்பு நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஆதார பீடமாகும்! அதனால்தான் யோகிகள் தங்கள் உடலை வலிமையுடையதாக, தூய்மையுடையதாகப் பாதுகாத்தனர்.
உடல் வலிமைக்கு ஆதாரம் மனத்தூய்மை! 
கோபம், பொறாமை, அகங்காரம், அற்பமான எண்ணங்கள் ஆகியவற்றை விட்டு அன்பு நிறைந்ததாக மனதை வைத்துக் கொள்ளுதல் உடல் நலத்துக்கு ஏற்றம்தரும்.  
புரையோடிப் போன புண் என்கிறோமே, அது என்ன? உடலுக்குள்ளே ஊடுருவி இனி மருத்துவம் செய்யமுடியாத நிலை அது! அதே போல தீய எண்ணங்கள் மனதில் ஊடுருவி விட்டால் அதை வெளியேற்றுவது என்பது கடினமாகும். இதைத்தான்,'புரைபடா மனமும்' என்கிறார் வள்ளலார். இதுமட்டும் போதுமா? 
பொய்மை எனும் கருமை அணுத்துணையும் நம்மிடத்தே வாசம் செய்ய விடலாகாது.
பின் என்ன! இறைவனை உள்ளத்தில் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்! எப்படி? ஒரு விளக்கை ஆடாமல் அசையாமல் காற்றில் அணையாமல் பாதுகாப்பது போல, இரவும் பகலும், எண்ணங்களைச் சிதறவிடாமல்  கருத்திலே வைத்து வணங்குதல் வேண்டும்.
ராமகிருஷ்ண பரம ஹம்சர் சொல்வார்: ஒரு வேலையாள் பணக்காரர் வீட்டில் வேலை செய்கிறார். அவருடைய மனம் மட்டும் வீட்டிலே உள்ள தன் குழந்தையைப் பற்றியதாக இருக்கும். அதுபோல என்ன செய்தாலும் சிந்தனை மட்டும் இறைவனிடம் இருத்தல் வேண்டும்.

நான் உண்கிறேன், உடுக்கிறேன். ஆனால் உலக மக்களை நம்புவதில்லை.
என்னுடைய நண்பன், எனக்கு நன்மை மட்டுமே நாடுகின்ற நல்ல தோழன் நீதானே?
உன்னை மட்டுமே நம்பி வாழ்கின்ற என்னை நீ கைவிடுதல் கூடாது.

 'அபயத்திறன்' ( அடைக்கலம் புகல்) என்ற தலைப்பில் உள்ள ஒரு பாடல்! பாடலைக் கீழே காண்க. 

புண்படா உடம்பும் புரைபடா மனமும்
பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்
கண்படா திரவும் பகலும்நின் தனையே
கருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன்
உண்பனே எனினும் உடுப்பனே எனினும்
உலகரை நம்பிலேன் எனது
நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
                                  - வள்ளலார்
அருட்பெருஞ் சோதி தனிப்பெருங்கருணை!




10 April 2014

எல்லோருக்கும் கருணை!

இறைவனது கருணையைப் பெற மனிதர்கள் என்ன செய்வார்கள்? பூமாலை அணிவிப்பார்கள். மந்திரங்கள் ஓதுவார்கள், பாடுவார்கள், இறைவன் புகழ் சொல்லும் நூல்களைப் படிப்பார்கள், படிக்கத்தெரியாவிட்டால் படிப்பதைக் கேட்பார்கள். இது ஒன்றும் அறியாதவர்கள் அப்பனே காப்பாற்று என்று கும்பிடுவார்கள். எதுவுமே செய்யாதவர்க்கும் அருள் புரியும் கருணை வள்ளல் இறைவன் என்கிறார் வள்ளலார்.

'பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன்
        படித்தறியேன் கேட்டறியேன் பத்தியில்பூ மாலை
அணிந்தறியேன் மனமுருகக் கண்களின்நீர் பெருக
         அழுதறியேன் தொழுதறியேன் அகங்காரம் சிறிதும்
தணிந்தறியேன் தயவறியேன் சத்தியவா சகமும்
         தானறியேன் உழுந்தடித்த தடியதுபோல் இருந்தேன்
துணிந்தெனக்கும் கருணைசெய்த துரையேஎன் உளத்தே
          சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே

இறைவனே, சிவபெருமானே, உன் பாதங்களில் அன்பு மிகுந்து வணங்கி அறியேன், சரிதான் வணங்கவில்லை என்றால் என்ன? 
ஏதாவது பாடலாம் என்றால் பாடவும் எனக்குத் தெரியாதே!
பாடத் தெரியாது,  போகட்டும் உன் புகழைப் படிக்கலாமென்றால் அதுவும் தெரியாது.
யாரோ படிக்கிறார்கள்,காது கொடுத்து அதைக் கேட்கலாம்! அதையும் செய்யவில்லை. 
வீட்டுத் தோட்டத்தில் பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. அவற்றை மாலையாகக் கட்டி உனக்கு அணிவித்து
அழகாவது பார்த்துள்ளேனா என்றால் அதையும் செய்ததில்லை.
உன் சந்நிதியில் என் மனம் உருகமாட்டேன் என்கிறது!
உன்னை, உன் அருளை வேண்டி அழத்தெரியவில்லை. 
ஞான சம்பந்தப் பெருமான் அழுததைக் கேட்டதும் அம்மையோடு வந்து அவருக்கு ஞானப் பாலைப் புகட்டினாயே!
அழத் தெரியாதவனுக்கு தொழத்தெரியுமா?
ஆனால் இறைவா இதையெல்லாம் செய்ய வேண்டுமென்றால் என் அகங்காரம், நானென்ற உணர்வு நீங்க வேண்டுமல்லவா? என்அகங்காரமும் தணியவில்லை.
பிற உயிர்களிடம் தயவும் கருணையும் என்னிடம் இல்லை.
சத்திய வாசகங்களையும் பேசி அறியேன். 
உளுந்து எனும் தானியத்தை உதிர்ப்பதற்காக உள்ள தடியைப் போன்றவனாய், உணர்வற்றவனாய் இருந்தேன்!

ஆனால் நீ என்ன செய்தாய்? பணிந்தோ, பாடியோ, படித்தோ, கேட்டோ, அழுதோ, தொழுதோ அறியாத எனக்கு மிகுந்த துணிச்சலுடன் கருணை செய்தாய். இவனுக்கு நாம் அருள வேண்டும் என என் உள்ளத்தே கோயில் கொண்டாய்! 

அதுமட்டுமா என் இதயக் கோயிலில் ஞானநடனம் புரிகின்றாய். பெருமானே உம்மை வணங்குகிறேன்.

அருட்பெருஞ் சோதி தனிப் பெருங்கருணை! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
















4 April 2014

அப்பாவும் வள்ளலாரும்

உலகில் மனிதராய்ப் பிறந்த எல்லோருக்கும்  பிடித்தமான சொல் அம்மா. 'அ' என்ற எழுத்து உலகில் உள்ள எல்லா ஒலிகளுக்கும் ஆதாரம். சுகமான தருணங்களை விடுங்கள், துயரம் வரும் போது மருந்தாய் இருப்பது அம்மா என்ற சொல்தான்.  மா, மாதா, அம்மே, அம்மை, அம்மகாரு, மம்மி, மாம் எல்லாம் அம்மாதான்.
ஆனால்........

திருவருட்பா, ஆறாம் திருமுறையைப் படித்துக் கொண்டிருந்த போது பாடலொன்று கண்ணில் பட்டது. பெரும்பாலும் அருட்பாவில் வள்ளலார் சிவபெருமானை அப்பா என்று அழைத்துதான் உருகுவார். அவருக்குத் தந்தை சிவபெருமான். அதேபோல சிவபெருமானும் தன்னை 'மகனே' என்றழைத்து அருள் புரிந்ததையும் கூறுகிறார். அது ஒரு தந்தை மகனுக்கான அற்புத உறவு!

அந்த உறவு ''சாலையப்பனை வேண்டுதல்'' என்ற தலைப்பில் உள்ள ஐந்து பாடல்களில் காணக்கிடக்கிறது.

அது என்ன சாலையப்பன்?  அறச்சாலை, கல்விச்சாலை, பாடசாலை, சிறைச்சாலை என்று கேள்விப்படுகிறோமே! சாலை என்றால் என்ன?சாலை என்பது ஒரு இடம். அவ்வளவுதான்.
கடலூரிலிருந்து சுமார் 30 கல் தொலைவில் உள்ளது பார்வதிபுரம் என அழைக்கப்படும் வடலூர். அங்கு வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையும், சமரச வேத தருமச்சாலையும் உள்ளன.
அங்கு எழுந்தருளியுள்ள சோதியே சாலையப்பன்!

ஐந்து பாடல்களில் நாற்பது முறை அப்பாவைக் கூப்பிடுகிறார் வள்ளலார். எளிமையான பாடல்கள் ஆதலின் பாடல்களை மட்டும் பிரித்து எழுதியுள்ளேன்.

''மன்னப்பா,  மன்றிடத்தே மா நடஞ்செய் அப்பா, என்தன்னப்பா, சண்முகங்கொள் சாமியப்பா,
எவ்வுயிர்க்கும் முன்னப்பா, பின்னப்பா, மூர்த்தியப்பா, மூவாத பொன்னப்பா, ஞானப் பொருளப்பா தந்தருளே.( மன்னப்பா -நிலை பெற்ற தந்தை, மாநடம்- ஆனந்த நடனம், மன்று -பொன்னம்பலம்
மூர்த்தி- வடிவுடை தெய்வம்,சிலைகள்) 

ஆதி அப்பா, நம் அனாதி அப்பா, நங்கள் அம்மை ஒரு பாதி அப்பா, நிருபாதி அப்பா, சிவபத்தர் அனுபூதிஅப்பா, நல்விபூதி அப்பா, பொற்பொது நடஞ் செய் சோதி அப்பா, சுயஞ் சோதி அப்பா எனைச்
சூழ்ந்தருளே.(நிருபாதி -அரசன்,அனுபூதி -அனுபவப் பொருள், சுயஞ்சோதி - எதனையும் சாராது தானாகவே ஒளியுள்ளது)

அண்ட அப்பா, பகிர் அண்ட அப்பா, நஞ்சணிந்த மணிகண்ட அப்பா, முற்றும் கண்ட அப்பா, சிவகாமி எனும் ஒண்தவப் பாவையைக் கொண்ட அப்பா, சடை ஓங்கு பிறைத் துண்ட அப்பா, மறை விண்ட அப்பா எனைச் சூழ்ந்தருளே.( அண்டம்,பகிரண்டம் - பிரபஞ்சத்தில் உள்ள உலகங்கள், ஒண்தவப்பாவை- உமை)

வேலை அப்பா, படை வேலை அப்பா, பவ வெய்யிலுக்கோர்  சோலை அப்பா, பரஞ்சோதிஅப்பா, சடைத் துன்று கொன்றை மாலை அப்பா, நற் சமரச வேத சன்மார்க்க சங்கச் சாலை அப்பா, எனைத் தந்த அப்பா, வந்து தாங்கிக் கொள்ளே. (வேலை - கடல், பவம்- பிறவித்துன்பம், சடைத்துன்று -சடையில் பொருந்தியுள்ள)

மெச்சி அப்பா, பாவலர் போற்றப் பொதுவில் விளங்கிய என் உச்சி அப்பா, என்னுடைய அப்பா, என்னை உற்றுப் பெற்ற அச்சி அப்பா, முக்கண் அப்பா, என் ஆருயிர்க்கான அப்பா, கச்சி அப்பா, தங்கக் கட்டி அப்பா எனைக் கண்டு கொள்ளே.'' 
பெற்றவர்கள் குழந்தைகளைக் கண்ணே, மணியே, செல்லமே, தங்கமே என்றெல்லாம் கொஞ்சுவார்கள்.  வள்ளல் பெருமான் எப்படியெல்லாம் சிவபெருமானை அப்பா அப்பா என்று உருகி உருகிக் கொஞ்சுகிறார்!மேற்கண்ட பாடல்கள் மீண்டும் மீண்டும் படிக்கச் செய்து மனதை உருக்குகிறது இல்லையா?

உங்களில் யாராவது அப்பாவைப் போற்றுபவர் உண்டா? 
அருட் பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை.