30 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவீழிமிழலை

                                      - முன்னரசும்
காழி  மிழலையருங்  கண்டுதொ ழக்காசளித்த
வீழி   மிழலை  விராட்டுருவே -

எல்லாராலும் நினைக்கப்படும் திருநாவுக்கரசரும், சீர்காழியில் தோன்றிய  திருஞானசம்பந்தரும்
தம்மைக் கண்டு வணங்கிய காலை அவர்களுக்குப் படிக்காசு தந்த, திருவீழிமிழலையில்  வீற்றிருக்கும்
பிரபஞ்ச ரூபமான பரம்பொருளாகிய சிவனே!

பூந்தோட்டத்திலிருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ளது. சம்பந்தர் 15 பதிகங்கள், அப்பர் 8 பதிகங்கள்.
வீழி என்பது ஒரு வகைச் செடி. வீழிச் செடிகள் நிறைந்திருந்த காரணத்தால் வீழிமிழலை. பல சிறப்புகள் உடைய தலம்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

29 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

சிறுகுடி
                                     
                                -ஆம்புவனம்
துன்னும் பெருங்குடிகள் சூழ்ந்துவலம் செய்து வகை
மன்னும் சிறுகுடிஆன் மார்த்தமே-

ஆன்மாவின் பொருளாய் சிறுகுடி என்னும் ஊரில் வீற்றிருக்கும் சிவபெருமானை
உலகிலுள்ள பெருங்குடி மக்கள் சூழ்ந்து வலம் வந்து வணங்குவர்.
செவ்வாய் தோஷம் நீக்கும் ஊர். கும்பகோணத்திலிருந்து நாச்சியார்
கோயில் வழி கடகம்பாடி சென்று அங்கிருந்து 3 கி. மீ செல்ல வேண்டும்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

28 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பாம்புரம்

                                                       - ஆடுமயில்
காம்புரங்கொள் தோளியர்பொற் காவிற் பயில்கின்ற
பாம்புரங்கொள் உண்மைப் பரம்பொருளே -

பாம்புபுரம் - பாம்புரம் எனப்படுகிறது.
காம்பு உரங்கொள் தோளியர் - மூங்கில் போன்ற அழகிய வலிமை பொருந்திய தோள்களை உடைய மகளிரும், தோகை விரித்து ஆடுகின்ற மயில்களும்  நிறைந்துள்ள சோலையுடைத்து திருப்பாம்புரம்
என்னும் பதி. இங்கே மெய்ப் பொருளாய் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.

இத்தலம் பேரளம் புகை வண்டி நிலையத்துக்கு மேற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
ராகு,கேது போன்ற சர்ப்பதோஷங்கள் விலக ஒரு பிரார்த்தனைத் தலம்.
சம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

இறைவன் :பாம்புரேஸ்வரர்
இறைவி   : வண்டார்குழலி
தலமரம்    : வில்வம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

27 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருத்திலதைப்பதி

                              - வளங்கோவை
நாடும் திலத நயப்புலவர் நாடோறும்
பாடும் திலதைப் பதிநிதியே -

செல்வ வளம் உடைய தலைவர்களை தினந்தோறும் நாடிச் செல்லும் திலத நயப் புலவர்கள்
நாள்தோறும் திருத்திலதைப் பதியில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானைப் பாடிப்
பரவுவார்கள்.

இவ்வூர் சிதிலைப்பதி, திலதர்ப்பணபுரி, மதிமுத்தம் என்று வழங்கப்படுகிறது. திலதர்ப்பணபுரியே திலதைப்பதி என மருவிற்று. அரிசிலாற்றங்கரையில் உள்ளது. திலம் என்றால் எள்.இறந்த முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம், தர்ப்பணம் முதலிய கடமைகளைச் செய்வதற்கு
உரிய தலம் .

இறைவன் :முக்தீஸ்வரர்
இறைவி   : பொற்கொடிநாயகி
தலமரம்   : மந்தாரை

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் -அருட்பெருஞ் சோதி

26 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமீயச்சூர்
மீயச்சூர் தஞ்சை பேரளம் நிலையத்துக்கு மேற்கில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

                                  - ஓகாளக்
காயச் சூர் விட்டுக் கதிசேர வேட்டவர்சூழ்
மீயச்சூர் தண்என்னும் வெண் நெருப்பே -

திருமீயஞ்சூரில் ஒளிவடிவாய் விளங்கும் இறைவன் குளிர்ச்சி பொருந்திய வெண்ணீற்றை அணிந்திருக்கிறான். காண்பவர்கள் வெறுத்து ஓகாளிக்கும் தன்மையுடைய உடல் பற்றை விட்டொழித்து நல்ல கதியை அடைய விரும்புபவர்  திருமீயச்சூரில் எழுந்தருளியிருக்கும்
சிவபெருமானைச் சூழ்வர்.

திருஇளங்கோயில்
                                  - மாயக்
களங்கோயில் நெஞ்சக் கயவர் மருவா
இளங்கோயில் ஞான இனிப்பே -

பொய் முதலிய குற்றங்கள் கோயில் கொண்டிருக்கும் நெஞ்சமுடைய கயவர்களால் நெருங்க முடியாதவன் திருஇளங்கோயிலில் ஞானவடிவாய் இனிமை மயமாய் எழுந்தருளியிருக்கும்
சிவபெருமான்.
திருவருட்பிரகாச வள்லலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

25 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

அம்பர் பெருந் திருக்கோயில், அம்பர் மாகாளம்

மாயூரத்திலிருந்து திருவாரூர் போகும் இருப்புப்பாதை வழியில் அம்பர் பெருங்கோயில் உள்ளது.
இக்கோயிலின் மேற்கே 2 கி. மீ தூரத்தில் திருமாகாளம் உள்ளது. மாகாளம்- கொடிய நஞ்சு.
தேவர்கள் சிவபெருமானுக்கு நஞ்சு தந்த பாவம் போக வழிபட்ட தலம் ஆதலால் அம்பர் மாகாளம் எனப்பட்டது.

                                   - கூட்டாக்
கருவம்பர் தம்மைக் கலவாத மேன்மைத்
திருவம்பர் ஞானத் திரட்டே 
                                       - ஒருவந்தம்
மாகாளம் கொள்ள மதனைத் துரத்துகின்ற
மாகாளத்து அன்பர் மனோல யமே -

மேன்மையுடையவர்கள் கருவிலேயே தீமை செய்யும் தீய பண்பினரைச் சேரமாட்டார்கள்.
இவர்கள் முழுமையான ஞானத் திரட்டாய் விளங்கும் சிவபெருமான் கோயில் கொண்டுள்ள
திருவம்பர் எனும் தலத்தில் வாழ்கிறார்கள்.

கொடிய நஞ்சு உண்டவரைத் திண்ணமாகக் கொல்லும் தன்மையுடையது. கொடிய நஞ்சைக்
கொடுத்ததால் ஏற்பட்ட பாவம் நீங்க, மதனைத் துரத்துகின்ற மாகாளம் எனும் பதியில் அன்பர்கள்
மனதில் ஒடுங்கி வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்குகிறேன்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


24 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கோட்டாறு

                                  -  தெள்ளாற்றின்
நீட்டாறு கொண்டரம்பை நின்று கவின்காட்டும்
கோட்டாறு மேவும் குளிர் துறையே -

தெளிவான நீரையுடைய ஆற்றங்கரை.அதில் நீண்ட தாறுகளைச் சுமந்து நிற்கும் வாழை மரங்கள்.
உயர்ந்து காணப்படும் இந்த வாழை மரங்கள் ஆற்றங்கரையை அலங்கரிக்கின்றன.
கோடை காலத்தில்  ஆற்றங்கரை, மென்மையான தென்றல் காற்றுடன் குளிர்ச்சியைத் தந்து சுகமளிப்பது போல தன்னை நாடி வந்தார்க்கு மகிழ்வளிப்பவன் திருக்கோட்டாறு
என்னும் பதியில் வீற்றிருக்கும் சிவபெருமான்.

கோட்டாறு என்பது கொட்டாறு என வழங்கப்படுகிறது. திருநள்ளாறு புகை வண்டி நிலையத்துக்கு வட மேற்கில் 4 கி. மீ. தொலைவில் உள்ளது. மூலவர் சந்நிதிக்கு முன்பாகத் தேன்கூடு உள்ளது.
இறைவன் : ஐராவதீஸ்வரர்
இறைவி   : வண்டமர் பூங்குழலி
தீர்த்தம்    : வாஞ்சியாறு
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

23 September 2013

இதுவரை.....

திருவருட்பிரகாச வள்ளலார் திரு .இராமலிங்க அடிகளார் அருளிய அருட்பா பாடல்கள் ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் திருமுறையின் இரண்டாம் நூல் விண்ணப்பக்
கலிவெண்பா. இதில் வள்ளலார் அவர்கள் தேவாரப் பதிகங்கள் அன்பு நிறைந்து புகழும் இறைவனுடைய சிவமூர்த்தங்களை எல்லாம் தனித்தனியாக சிந்தித்தும், பொதுவில் வழி பட்டும்,
இறை வழிபாட்டிற்குத் தடங்கலாய் இருக்கும் செய்கைகளையும், குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாது இறைவன் அருள்மழை பொழிவதையும், அருளை இறைஞ்சியும், திருவடி இன்பம் தந்துஅருள் புரியவேண்டும் என விழைந்தும் தம் கோரிக்கைகளையெல்லாம் என்புருக நெகிழ்ந்து
விண்ணப்பித்துக் கொள்கிறார்கள். நாமும் உள்ளம் நெகிழ இறைவன் திருத்தாளில் மனம் நெகிழ விண்ணப்பித்துக் கொண்டால் இறைவன் நமக்கும் அருள் புரிவான்.
இதுவரை 117 கண்ணிகளின் பொருளைப் பார்த்தோம். 279 வது கண்ணிவரை திருத்தலங்களின் தரிசனம் கிடைக்கிறது. பின்னர் 290வது கண்ணியிலிருந்து தன் விண்ணப்பத்தை பலவாறு வனைந்து
வனைந்து எடுத்துச் சொல்கிறார்.
 ''நினைந்து நினைந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, அன்பே நிறைந்து
நிறைந்து,'' படித்துப் படித்து இன்புற வேண்டிய நூல் திருவருட்பா.

மீண்டும் தொடரவும், முழுமையடையச் செய்வதையும், அவன் கரங்களில் ஒப்படைக்கிறேன்.

''நான் செயும் பிழைகள் பலவும் நீ பொறுத்து நலந்தரல் வேண்டுவன் போற்றி
ஏன் செய்தாய் என்பார் இல்லை மற்று எனக்குஉன் இன்னருள் நோக்கஞ்செய் போற்றி
ஊன்செய் நாவாலுன் ஐந்தெழுத்து எளியேன் ஓதநீ உவந்தருள் போற்றி
மான்செயும் நெடுங்கண் மலைமகள் இடங்கொள் வள்ளலே போற்றி நின் அருளே''
                     அருட்பெருஞ் சோதி தனிப் பெருங்கருணை.


6 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருத்தருமபுரம்

                                         - நீக்கும்
கரும புரத்திற் கலவாது அருள்செய்
தரும புரம்செய் தவமே -

நாங்கள் செய்த தவப்பயனாய் திருத்தருமபுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே
விலக்குதற்குரிய தீவினைகள் எம்மோடு கலவாது காத்து அருள் புரிவீராக.

மார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த குறை நீங்க எமன் வழிபட்டதலம்.
சம்பந்தர் யாழ்மூரிப் பதிகம் பாடிய தலம். யாழ்ப்பாணர் யாழில் அமைத்துப் பாட இயலாத
இசைப் பாடல் யாழ்மூரி.

இறைவன் - யாழ்மூரிநாதர்
இறைவி   -  தேன் அமுதவல்லி
தலமரம் - வாழை
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


5 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருத்தெளிச்சேரி

                                             - நாட்டமுற்ற
வாக்குந் தெளிச்சேரி மாதவர்க்கு இன்பநலம்
ஆக்கும் தெளிச்சேரி அங்கணனே -

வாக்குச்சுத்தம் உடையவர்கள் மாதவம் புரிந்தவர்கள் ஆவர். இத்தகைய பெருந்தவம் உடையவர்களுக்கு இன்பத்தையும் நன்மையையும் அளிக்கும் திருத்தெளிச்சேரி சிவனை
வணங்குவோம்.

இப்பகுதி கோயிற்பத்து எனவும் வழங்கப்படுகிறது. சோமவார வழிபாடு இங்கு சிறப்பு.

இறைவன் : பார்வதீஸ்வரர்
இறைவி   : சத்தியம்மை
தலமரம்    : வன்னி, வில்வம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

4 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவேட்டக்குடி

                                              - வற்கடத்தும்
வாட்டக் குடிசற்றும் வாய்ப்பதே இல்லை எனும்
வேட்டக் குடிமேவு மேலவனே -

வற்கடம் - பஞ்சம்; வாட்டம் - பஞ்சத்தால் உண்டாகும் துன்பம்.
திருவேட்டக் குடியில் அனைவருக்கும் மேலான சிவபெருமான் அருள்புரிந்து வருகிறார்.எனவே பஞ்சம் ஏற்பட்டாலும் இவ்வூர் மக்கள் சற்றும் துன்பப்பட வாய்ப்பில்லாத ஊர் திருவேட்டக்குடியாகும்.

இத்தலம் காரைக்காலுக்கு வடகிழக்கில் 10 கி.மீ தொலைவில் உள்ளது.

இறைவன் : திருமேனியழகர், சுந்தரேஸ்வரர்
இறைவி    : சவுந்தர நாயகி, சாந்தநாயகி
தீர்த்தம்     : தேவதீர்த்தம்

திருவருட்பிரகாசவள்ளலார்  - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

3 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கடவூர் மயானம்

                                 - வன்மையிலாச்
சொற்கடவி மேலோர் துதித்தலொழி யாதுஓங்கும்
நற்கடவூர் வீரட்ட நாயகனே -

மேன்மை பொருந்திய நற்கடவூர் வீரட்டத்தில் வீற்றிருக்கும் நாயகனாம்  சிவபெருமானை
மென்மையான சொற்களைச் சொல்லித் துதிக்கும் உயர்ந்த பண்புடையவர்கள் எப்போதும்
துதிப்பார்கள்.

இங்கு கோயில் உண்டேயன்றி ஊர் இல்லை. இயமனைச் சினந்து வீழ்த்திய காரணத்தால்' மயானம்'
என்கின்றனர்.திருமயானம், திருமெய்ஞானம் என வழங்கப்படுகிறது.

இறைவன் :பிரமபுரீஸ்வரர்
இறைவி   : மலர்க்குழல் மின்னம்மை
தீர்த்தம்    : காசிதீர்த்தம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

2 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கடவூர்

                                  - மாறகற்றி
நன்கடையூர் பற்பலவு நன்றிமற வாதேத்தும்
தென்கடையூர் ஆனந்தத் தேறலே -

சிவானந்தத் தேனை அளிப்பவர் தென்கடையூர் சிவபெருமான். அவரை யார் போற்றுகிறார்கள்?
அறத்துக்கு மாறான பாவங்களைச் செய்வதிலிருந்து விடுவித்து, அறமானவற்றையே அடையச்
செய்யும் பல ஊரிலும் இருக்கும் அன்பர்கள் நன்றி மறவாமல் துதித்துப் போற்றுகிறார்கள்.

மாயூரம் தரங்கம்பாடி புகை வண்டிப் பாதையில் உள்ள ஊர். சிவபெருமான் மார்க்கண்டேயனைக்
காப்பாற்ற இயமனைக் காலால் உதைத்து வீழ்த்திய தலம்.

இறைவன் : அமிர்தகடேஸ்வரர்
இறைவி   : அபிராமி
தலமரம்    : பிஞ்சிலம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

1 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்( தொடர்கிறது)


திருஆக்கூர்

                                                   - பொங்குமிருள்
கூறுதிரு ஆக்கூர் கொடுப்பனபோல் சூழ்ந்து மதில்
வீறுதிரு  வாக்கூர் விளக்கமே -

செல்வம் இருக்கும் இடத்தை பிறர் அறியாமல் காப்பது இருள். அதுபோல பொன்னும் மணியும் செறிந்து  பேரொளி விளங்கும் திருவாக்கூரின் ஒளியைக் குறைத்துக் காட்டுகின்றன அவ்வூரின் மதிற்சுவரும், வானளாவிய மரங்கள் நிறைந்த சோலையும்!  மனிதர்களுடைய மன இருளை நீக்கி தெளிவு தரும்  ஒளி விளக்காய் சிவபெருமான் திருவாக்கூரில் வீற்றிருக்கிறார்.

சீர்காழியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் உள்ளது. கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்.
இறைவன் : தாந்தோன்றீஸ்வரர்
இறைவி   : வான்நெடுங்கண்ணி
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி