31 May 2014

16. அருணாசல அட்சரமணமாலை

காந்தம் இரும்பு போல் கவர்ந்தெனை விடாமல்
   கலந்தெனோடு இருப்பாய் அருணாசலா

இரும்பைக் காந்தம் கவர்கிறது! அதுபோல என்னை நின்பால் கவர்ந்திழுத்து பிரிவேயின்றி
எப்போதும் என்னோடு இரண்டறக்கலந்திருப்பாய் அருணாசலா.
அடுத்து ஏழு கண்ணிகள் அருணாசலனிடம் பிரார்த்தனையாய் மலர்கிறது.
அருணாசல அருட்பெருஞ் சோதி!

30 May 2014

15. அருணாசல அட்சர மணமாலை

 கண்ணுக்குக் கண்ணாய் கண்ணின்றிக்
    காணுனைக் காணுவது எவர்பார் அருணாசலா!

கண் இருக்கிறது. கண்ணுக்கு ஒரு கண் இருக்கிறதா?
கண்ணுக்குக்  கண் உள்ளதாம்!
ஆனாலும் கண் இல்லாமல் காண்கிறாராம்!
கண்ணே இல்லாமல் பார்ப்பவர் யாரோ!
பார் அருணாசலா!
''கண்ணின்றி காண் உனை காண்பது எவர்?''
''கண்ணே அக் கண்ணின் மணியே மணியில்  கலந்து ஒளி செய் விண்ணே"
என வடிவுடை அம்மையை அழைக்கிறார் வள்ளலார்.
கண்ணுக்குள் உள்ளது கண்மணி. அதற்கு ஒளிதருவது, ஒளியைப் பார்க்க உதவுவதுஆன்மசக்தி.
அதை உணர வழிசெய்வது மனம்.
கண் பார்க்க உதவும்.'கண்ணுக்குக் கண்'
மனதிற்கு ஒளிதரும்.
காண்பவர் கண்ணுக்குக் கண்ணாக நின்று, கண்கள் இல்லாமலே காண்பவனாகிய உன்னை
எவரால் காணமுடியும்?
உன்னைக் காண எனக்கு அருள் தருவாய்.


29 May 2014

14. அருணாசல அட்சர மணமாலை

ஒளவை போல் எனக்கு உன் அருளைத் தந்து எனை
   ஆளுவது உன் கடன் அருணாசலா!

ஒளவை என்றால் தாய்.'ஈன்றிடும் அன்னையிற் பெரிதருள் புரிவோய்,' என்றாரே முன்னால்!
இங்கு மீண்டும், ஒரு தாயைப் போல் உன் அருளினால் என்னை ஆளுவது வேண்டும் என்கிறார்.
அரசன் நாட்டு மக்களை ஆள்கிறான்.
தன் குழந்தைகளை ஆளும் அரசி அன்னை! தன்னுடைய சுகத்தைச் சற்றும் சிந்தியாது, இரவு பகல் பாராது, தன் உயிரைப் பணயம் வைத்துக் குழந்தையைப் பெற்ற நாளிலிருந்து ஒரு தாயின் கருணைக்கும்  பராமரிப்புக்கும் எல்லையே இல்லை!
 சிவபெருமானோ அம்மையப்பன் அல்லவா?
வள்ளல் பெருமான், சிவமே தந்தை, தாய், குரு, நட்பு, துணை, மருந்து, மந்திரம்,பொன், நிதி என அனைத்தும் சிவமே என உருகுவார். எத்தனை சத்தியமான சொற்கள்? தாய் தான் ஒரு குழந்தையின் முதல் குரு, சினேகிதன், துணை! அம்மா என்ற சொல் மருந்து, துன்பங்கள் வரும் போது மந்திரம்!

''அருளைத் தந்து ஆளுவது,'' என்ன? ஆம்,அது பூரண சரணாகதி.
''பாட்டுவித்தால் பாடுகிறேன், பணிவித்தால் பணிகிறேன், ஊட்டுவித்தால் உண்கிறேன், ஆட்டுவித்தால் ஆடுகிறேன்,'' அவன் செய்வது எப்படியோ, அப்படியே ஆகட்டும் - வள்ளல்!

ஆகவே ஒரு தாய் போல உன்னருள் கொண்டு என்னைப் பராமரிப்பாய். அது 'உன் கடன் ' என்கிறார்.
அது என்ன 'கடன்'?
பெற்ற கடன் என்பார்களே?
மதுரையில் ஏதுமறியாத சிறுவனாய் இருந்த போது,'அருணாசலம் என்ற பெயரை, ஊரைக் காட்டி, வலிய வந்து இடத்திலிருந்து கிளப்பி, அகம் புகுந்து, இரண்டறக் கலந்து, அக குகையில் சிறைவைத்து, தப்பிவிடாமல் காத்து, ஊர் சுற்றும் உளத்தை அடக்கி, ஞானமளித்தவன் ஆயிற்றே?
தன்னிடம் அழைத்துக் கொண்டு வந்தவன் அல்லவா? அவனையன்றி வேறு யார் பார்த்துக் கொள்வார்கள்?
திருவண்ணாமலையில் ஶ்ரீ ரமணர் சமாதியில் ஆழ்ந்த போது பலரையும் அனுப்பி அன்னை போல் உணவளித்துக் காத்தவன்!அதை நினைவு கூர்ந்து   'என்னை ஆளுவது உன் கடன்'' என்றார்.

'அ' முதல் 'ஒள' வரை பன்னிரண்டு உயிர் எழுத்துகளில் தொடங்கும் கண்ணிகளைப் பார்த்தோம்.
அதன் வரி வடிவம் அடுத்த பதிவில்.


28 May 2014

13. அருணாசல அட்சர மணமாலை

ஓங்காரப் பொருள் ஒப்புயர் வில்லோய்
உனையார் அறிவார் அருணாசலா

ஓங்காரப் பொருளாய் ஒப்பும் உயர்வும் அற்று விளங்குபவனே. உன்னை  உண்மையில் அறிய வல்லவர் யார்?
ஓம் என்பது பிரணவ மொழி. பிரபஞ்சத்தின் அத்தனை தோற்றங்களுக்கும் ஆதாரமாகக் கருதப்படுவது 'ஓம்' எனும் ஒலியாகும். ஓம் என்பதனுள் அகரமும், உகரமும், மகரமும் உள்ளன.''ஓங்காரத்து உள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்,'' ஓம் என்ற பிரணவத்தின் உள் ஒளியாய் உள்ள பெருமானே எனப்பாடுகிறார் வள்ளலார்.  ஓங்காரம் ஒளியுடையது போலவே ஒலியுடையது.
இறைவன் ஓங்காரத்து உருவாய் நிற்பதால் சிந்திக்கும் உள்ளத்தில் அவன்  காட்சி தருகிறான்.
''ஓமெழுத்தில் அன்பு  மிக  ஊறி ஓவியத்தில் அந்தம் அருள்வாயே,'' என்பார் அருணகிரி.
''உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா,'' என்பது சிவபுராணம். என் உள்ளத்தில் ஓங்காரமாய் நீ ஒலித்துக் கொண்டிருப்பதை நான் அறிந்து கொள்ளும் போது எனக்கு முக்தி கிடைக்கும்!
பிரபஞ்சம் முழுவதிலும் ஓங்காரமாக இறைவன் ஒலித்துக் கொண்டிருக்கிறான். நம் உடலை ஆன்மிக வாழ்வுக்காக சீர் படுத்தினால் நாமும் நம் உள்ளத்தில் ஓங்கார ஒலியைக் கேட்கலாம்.


இது முழுமையானது. எனவே ஒப்பிட்டுக் கூற ஏதுமற்றது. இதை விட உயர்ந்தது எதுவும் இல்லை. எனவே 'ஒப்புயர்வு இல்லோய்' என்றார்.
அவனை முழுமையாக உணர்ந்தவர் யாருமிலர்.
அவனை முழுமையாக உணர்ந்தவர் யாருமிலர்.எனவே 'உனையார் அறிவார்' என்றார்.
அருணாசல அருட்பெருஞ்சோதி!

27 May 2014

12. அருணாசல அட்சரமணமாலை

ஒருவனாம் உன்னை ஒளித்தெவர் வருவார்
       உன் சூதே இது அருணாசலா!

இறைவனாம் அருணாசலனுடன் ஶ்ரீரமணர் உரையாடுகிறார்! சில பல சமயங்களில் வாய் திறந்து பேசுவதைவிட மெளனமான உரையாடல்கள் நம்முள் நடைபெறுகின்றன.

முந்தைய கண்ணியில், 'ஐம்புலன்களான கள்வர்கள் என் அகத்தில் புகும் போது நீ என் உள்ளத்தில் இருக்கவில்லையோ?' என்ற கேள்வியைக் கேட்டார். இந்தக் கண்ணியில் அதற்கு பதில் சொல்கிறார்.

இறைவன் ஒருவனே எல்லாம் வல்லவன். அவனன்றி இரண்டாவது இல்லை. "அவனன்றி ஓரணுவும் அசையாது,'' அவனருளாலே அவன் தாள் வணங்கிறோம். அவன்தான் ஒருவன்!
"ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென அவை அன்றென விளங்கிய அருட்பெருஞ் சோதி,''என்பது அகவல்.
ஒவ்வொரு ஜீவனிலும் ஆன்மப் பிரகாசமாக விளங்குவது ஒன்றே.
பார்த்தாயா, என்னோடு விளையாடுகிறாயே! உனக்குத் தெரியாமல், திருட்டுத்தனமாக வேறு யார் என்னுள்ளத்தில் புகமுடியும்? எல்லாம் உன்னுடைய விளையாட்டு! எனக்கு எல்லாம் தெரியும் போ!
என்னை ஏமாற்றாதே என்கிறார்.
அடுத்து என்ன சொல்கிறார் பார்ப்போம்!






26 May 2014

11. அருணாசல அட்சர மணமாலை


ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது
அகத்தினில் நீஇலையோ அருணாசலா

முந்தைய கண்ணியில் ஐம்புலன்கள் உன் இதயகுகையில் சிறைப்பட்டிருக்கும் என்னை வெளியே இழுக்க முயல்கையில் தூங்குவதுபோல், ஒன்றும் அறியாதவனைப் போல் சும்மா இருப்பது அழகோ, ''ஏனிந்த உறக்கம், இது உனக்கு அழகோ?'' என்றார். 

ஐந்து புலன்களைக்  கள்வர்கள் என்கிறார்! கள்வர்கள்தான் எப்படியாவது வீட்டினுள் நுழைந்து பொருட்களைக் கொள்ளையடிக்கப் பார்ப்பார்கள்! கண்ணும், காதும், மூக்கும், வாயும்தான் மனிதர்களை என்னபாடு படுத்துகின்றன? ஒரு ஐந்து நிமிடம் தியானம் செய்ய முடிகிறதா? நம்மை அறியாமலே நம்மை ஆட்டிப் படைக்கும் கள்வர்கள்!
 உன்னிலே மனம் ஒருமித்து இருக்கிற என்னை வெளியே கொணர என்னுள்ளே புகுந்தார்களே அப்போது நீ எங்கே போயிருந்தாய்? உனக்குத் தெரியாதா?அகத்தில் நீ இருந்திருந்தால் அவர்கள் உள்ளே நுழைய முடியாது அல்லவா?
ஐம்புலன்களும் நம்முள்ளே இருக்க எங்கிருந்து நுழைவது என்ற கேள்வி எழுகிறது அல்லவா? 
ஆம், நம்முள்ளே இருக்கிற ஐம்புலக் குதிரைகள்? மனம்தான் சாரதி! சாரதியின் கையில் சாட்டையாக இருக்குமாறு ஆன்மாவாகிய சக்தியிடம் கொடுத்து சரணாகதி அடைவதுதான் ஒரேவழி!

இறைவனுடைய திருவருள் இல்லாவிட்டால் ஆன்ம வாழ்வில் முன்னேற முடியாது என்பதை அழகாகச் சொல்கிற வரிகள்.
இல்லையோ? என்னும் போது இருக்கிறாய் அதனால் புலனடக்கம் பெற்றேன் என்று சொல்வது விளங்கும். எனவே பிரிவேதும் இல்லாமல் என்னைக் காப்பது உன் கடன் என்று அருணாசலத்திற்கு உணர்த்துகிறார்.


25 May 2014

10. அருணாசல அட்சரமணமாலை

10.ஏனிந்த உறக்கம் எனைப் பிறர் இழுக்க
       இது உனக்கு அழகோ அருணாசலா!

ஐம்புலன்களும் என்னை அத்தனை திசைகளிலும் கவனத்தை மாற்றி இழுக்கின்றன. நீ என்ன செய்கிறாய்? உறங்கிக் கொண்டு இருக்கிறாய்! உறங்குகிறாயா, இல்லை உறங்குவதுபோல் நடிக்கின்றாயா? இது உனக்கே நியாயமா? அருணாசலனுக்கு ஏது உறக்கம்?
  
முந்தைய கண்ணியில் "இதுவோ ஆண்மை?" என்றவர் இப்போது "இது உனக்கு
அழகோ" என்று செல்லமாக அருணாசலனை கோபிக்கிறார்.
'ஊர் சுற்றும் உள்ளத்தை அடக்க உனதழகைக் காட்டு,' என எட்டாவது கண்ணியில் சொன்னார்.
அழகு என்பது இறைவனின் கருணை நிறைந்த உள்ளத்தைக் குறிக்கிறது.


அட்சர மணமாலை முழுதும்  பல்வேறு காட்சிகள்  நம் கண்முன் அரங்கேற, ஒரு இனிய நாடகத்தைப் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.

24 May 2014

9. அருணாசல அட்சர மணமாலை

எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில்
இதுவோ ஆண்மை அருணாசலா!

எனை அழித்து - நான் என்ற எண்ணமே ஒவ்வொருவருடைய வாழ்வுக்கும் ஆதாரம். இந்த நான் என்ற எண்ணம் நீங்க வேண்டும்.
' என்னாலாவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே உன்னாலே என்று உணரப் பெற்றேன்,' என்பது தாயுமானவர் வாக்கு.
நான் என்ற உணர்வை அழித்து, சச்சிதானந்தமான உன்னோடு என்னை இரண்டறக் கலக்கவேண்டும்.
இதுதான் உனது ஆண்மைக்கு அழகாகும்!
''தான் ஆனான், நான் ஆனான், நானேதானான்,'' என்பார் வள்ளலார். இந்தக் 'கலத்தல்' என்ற சொல்லின் முழுப் பொருளும் திருவருட்பாவைப் படிக்கக்  கிடைக்கும்.

 ஈன்றிடும் அன்னையிற் பெரிதருள் புரிந்து,  அழகைக்காட்டி, அகம் புகுந்து ஈர்த்து, அககுகையில் சிறை வைத்து, ஊர் சுற்றாமலும், ஏமாற்றி ஓடாமலும் உள்ளத்தை உறுதி செய்தாகிவிட்டது. இப்போது நானென்ற உணர்வை நீக்கி ஒருமையடையச்செய், உன் ஆத்ம சொரூபத்துடன் என்னுடைய ஆன்மாவையும் ஒன்று சேர்த்துக் கொள்என்று வேண்டுகிறார் மகரிஷி.

அருணாசல அருட்பெருஞ் சோதி!





23 May 2014

8. அருணாசல அட்சர மணமாலை

8. ஊர் சுற்று உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட
         உன்னழகைக் காட்டு அருணாசலா

உன்னை ஏமாற்றி ஓடாது உள்ளத்தை உறுதியாக இருக்குமாறு,
பிடித்துவைத்துக் கொள் என்றவர்
மீண்டும் தன் உள்ளத்தைப் பற்றிச் சொல்கிறார்.
மனம் குரங்கு போல் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவும்.
இருந்த இடத்தில் இருந்தபடி ஓயாது ஊர் சுற்றும்!
உள்ளம் ஊர் சுற்றுகிறதா?

அப்படியென்றால்?

வள்ளலார் மிக அழகாக  மனதைப் பற்றிச் சொல்கிறார்!
''மனமான ஒரு சிறுவன் சும்மாவிரான்,
காம மடுவிடை வீழ்ந்து சுழல்வான்,
சினமான வெஞ்சுரத்தில் உழல்வான்,
லோபமாம் சிறு குகையில் புகுவான்,
மோக இருளிடைச் செல்குவான்,
மதமெனும் செய்குன்றில் ஏறிவிழுவான்,
சிறிதும் என் சொல் கேளான்,
என் கைக்கு அகப்படான்,
இதற்கு ஏழையேன் என் செய்குவேன்?
என்னால் ஒன்றும் செய்யமுடியாது!"
எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதானே இது!

ஊர் சுற்றும் உள்ளத்தைக் காப்பாற்ற, அடக்க  என்ன வழி?
அருணாசலமே!
அது உன்னால்தான் முடியும்!
நீ வரவேண்டும்! உன்னுடைய அழகைப் பார்த்தவுடன்
என் உள்ளம் அப்படியே அடங்கி
உன் பாதங்களில் சரணாகதி அடைந்துவிடும்.
எனவே ஊர்சுற்றும் என் உள்ளத்தை அவ்வாறு செய்யவிடாமல்
உனதழகைக் காட்டி ஆட்கொள்வாயாக.

பிறையணி சடையினானைக் காண்பவர்க்கு வேண்டுவதும் வேறுளதோ?








22 May 2014

7. அருணாசல அட்சர மணமாலை

7. உனையே மாற்றி ஓடாது உள்ளத்தின் மேல்
       உறுதியாய் இருப்பாய் அருணாசலா

(உனை- ஏமாற்றி= ஓடாது- உள்ளத்தின் மேல் உறுதியாய் உன்னை விடாமல் இருத்தல் வேண்டுமென வேண்டுகிறேன்.)

 பெற்ற தாயினும் பேரருள் புரிபவனாகிய நீ என் அகம் புகுந்து, என்னை ஈர்த்து, இரண்டறக் கலந்து, உன் இதயகுகையில்  சிறை வைத்தாய்! இனிமேல் உன்னை யார் விடப்போகிறார்கள் என்று கர்வம் கொண்டேன்!  ஆனால்....
என்னுடைய பொல்லாத உள்ளம் இருக்கிறதே அது எத்தகையது?
உன்னை ஏமாற்றிவிட்டு ஓடிப் போகத் தயாராக இருக்கிறது!
எந்த பேதமும் இன்றி எல்லாப் பொருட்களிலும் உட்காரும் ஈயைப் போன்று என் ஐம்புலன்கள் என்னை இவ்வுலக விஷயங்களுக்கு கட்டி இழுக்கிறது.

'உனை ஏன் நினைப்பித்தாய், யாருக்காக என்னை ஆண்டனை, 'என்றெல்லாம் கேட்டவர் இப்போது விண்ணப்பம் செய்கிறார்!

அப்பனே, என் மனதை அடக்கும் சக்தி எனக்கு இல்லை. நீதான் என் உள்ளத்திற்கு தெளிவைக் கொடுத்து சாதனையில் உறுதியோடு நிற்குமாறு அருள் புரிய வேண்டும்.

தியானம் செய்வதற்கும், ஆன்மிக வாழ்வை உறுதியோடு பின் பற்றுவதற்கும் இறைவன் துணை வேண்டும்.

(உள்ளம், மனம் எல்லாம் ஒன்றே. மனம்  சதா எண்ணங்களை உற்பத்தி செய்து கொண்டு இருக்கிறது.
யானையின் துதிக்கையில் ஒரு சங்கிலியைக் கொடுத்தால் அது  வேறொன்றையும் பற்றாமல் அதையே பற்றிக் கொண்டு செல்லும். அது போல மனதையும் ஒரு நாம ஜபத்திலோ, அல்லது உருவ நினைப்பிலோ
இருக்குமாறு பழக்கினால்  மனமும் அதையே பற்றிக் கொண்டிருக்கும் என்பது ஶ்ரீரமணர் வாக்கு.)






21 May 2014

6. அருணாசல அட்சர மணமாலை



6. ஈன்றிடும் அன்னையிற் பெரிதருள் புரிவோய்
     இதுவோ உனதருள் அருணாசலா

பெற்றதாயை விட பெரிதும் அருள் புரிபவனே, இளம் வயதில் அருணாசலப் பெயர் கேட்ட மாத்திரத்தில்
ஆன்மானுபவம் ஏற்படும்படிச் செய்தாயே! உன் கருணையே கருணை!

'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ,' அன்னையினும் தயவுடையோய்,' தாயிற் சிறந்த தயவான தத்துவனே,' என்று இறைவன் தாயினும் மேலானவன் என உணர்த்தும் பாடல்கள் பக்தி இலக்கியத்தில் நிறையவே உள்ளன.
முதலில் அகம் புகுந்து ஈர்த்து, உள்ளத்தில் சிறை வைத்து, சிறையிலிருந்து விடுவிக்காமல் உலகப் பழியிலிருந்து தப்பித்து, இனி பிரிவே இல்லாமல் தன்னை ஆண்டுகொண்ட அருணாசலன் யார்?
இவ்வுலகில் மனிதனாய் பிறக்கும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் தன்னலமற்ற அன்பைக் காட்டுபவள் தாய்தான். அதேபோல அருணாசலன் தனக்கு ஆன்ம சாம்ராஜ்யத்தைக் காட்டி பேரருள் புரிந்த
தாயானவர், தன்னை ஆட்கொண்டவர் என்பதை இக்கண்ணியால் உணர்த்துகிறார். 

20 May 2014

5. அருணாசல அட்சரமணமாலை

5. இப்பழி தப்பு உனை ஏன் நினைப்பித்தாய்
        இனியார் விடுவார் அருணாசலா

ஶ்ரீரமணர் சொல்கிறார்:
மதுரை மாநகரில் சிவனே என்று இருந்த என்னை உறவினர் ஒருவர் வாய்வழி அருணாசலம் என்ற பெயரைக் கேட்கச் செய்தாய்.
உடனே உள்ளத்தில் புகுந்து, என்னைக் கவர்ந்து, உன் இதய குகையிலே சிறை வைத்தாய்.
இப்போது என்னை அகற்றிடுவேன் என்கின்றாய். அப்படிச் செய்தால் உன்னை அகிலம் பழித்திடும்!  வேண்டாம், இந்த பழிச்சொல் உனக்கு வராமல் உன்னை பாதுகாத்துக் கொள்.
நீதானே உன்னை நினைக்கும்படிச் செய்தாய்? உன்னிடம் பக்தி கொள்ளச் செய்தாய்?
இனிமேல் நான் உன்னை விடுவேனோ? விடமாட்டேன்.

(என்னைக் கைவிட்டால் வரும் பழியிலிருந்து உன்னை விடுவித்துக்கொள். நீதானே என்னை, உன்னை நினைக்குமாறு செய்தாய்! இனி உன்னை நான் விடமாட்டேன்)

வள்ளலார் பாடுகிறார்,' உன்னை நான் மறந்திடுவேனோ, மறந்தால் கணம் தரியேன், உயிர் விடுவேன் உன் ஆணை இது. என்னை நீ மறந்தால் நான் என்ன செய்வேன், எவர்க்கு உரைப்பேன், எங்குறுவேன், எந்தாய், எந்தாய்'  காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கிப் பாடும்  இப்பாடல்கள் அமைதி கலந்த ஆனந்தத்தைத் தருகின்றன அல்லவா? அருணாசலத்தை மறவாமல் வழிபடுவோம்.
அருணாசல சிவ, அருட்பெருஞ்சோதி.

19 May 2014

4. அருணாசல அட்சர மணமாலை

4. ஆருக்காவெனை ஆண்டனை அகற்றிடில்
         அகிலம் பழித்திடும் அருணாசலா
முதலில் அருணாசலமான உன்னை என் அகத்திலே நினைக்கச் செய்தாய்!
பின்னர் உன்னை என்னோடு இரண்டறக் கலந்து அபின்னமாக்கினாய்!
உன் அகமாகிய இதய குகையிலே சிறைப்படுத்தினாய்!
இச்செயல்களையெல்லாம் நீ யாருக்காகச் செய்தாய்?
எனக்காக என்றால் என்னை நீ கைவிடலாமா?
அவ்வாறு கைவிட்டால் எனக்கு ஒன்றுமில்லை!
உன்னைதான் இந்த உலகம் பழிக்கும். ஆகவே எப்போதும் உன்னை
விட்டுப் பிரியேன்!
ஆன்ம வாழ்வுக்கு வந்தபின் ஶ்ரீ ரமணர் அருணாசலத்தைப்
பிரியவே இல்லை. ஆயின் பக்தி மேலிடப் பாடுகையில் தமக்கு ஆண்டவன்
மீதிருந்த அன்பின் நெகிழ்ச்சியில்,'என்னை ஆண்டு கொண்டவனே, அகற்றிடில் அகிலம் பழித்திடும்,'
என்கிறார்.

நல்லது நடக்கும் போது கடவுள் நம்பிக்கை உண்டாகிறது. துக்கம் ஏற்படும் போது அந்த நம்பிக்கை
போய் விடுகிறது. கடவுள் என்னைக் கை விட்டுவிட்டார் என்றெல்லாம் பழிக்கிறது.

வலிய வந்து ஆட்கொண்ட அருணாசலனிடமிருந்து தனக்குப் பிரிவில்லை என்பதை இவ்வரிகள் தெளிவாக்குகிறது.

18 May 2014

3.அருணாசல அட்சர மணமாலை

3. அகம் புகுந்து ஈர்த்து உன் அககுகை சிறையா
     அமர்வித்தது என்கொல் அருணாசலா

ஈர்த்தல் என்றால் இழுத்தல். காந்தம் இரும்பை  ஈர்க்கிறது. அதுபோல என்னுடைய அகத்தில் புகுந்து
என்னை உன்னோடு இழுத்துக் கொண்டாய் அருணாசலா!

அதன் பின் சும்மா இருந்தாயா? என்னை உன்னுடைய அகத்தில் வேறு எங்கும் போக முடியாமல் சிறை வைத்துவிட்டாய்! அன்புச் சிறை! எதற்காக இப்படிச் செய்தாய் என்று சொல் அருணாசலா!
இறைவனாம் அருணாசலன் ஶ்ரீரமணரின் இதயத்தில் புகுந்து  ஈர்த்து தன்னுடைய இதய குகையில் அவரை சிறை வைத்து விட்டானாம்! எத்தனை அழகான சொல்நயம்! அருணாசலம் வந்த பின் ஶ்ரீரமணர்
திருவண்ணாமலையை விட்டு எங்குமே செல்லவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.


நாயகி நாயகன் பாவம் வெளிப்படும் கண்ணி இது. தலைவன் தலைவி வீட்டிற்குள் வலியப் புகுந்து அவளைக் கைப்பற்றிச் செல்கிறான். எதற்காக இப்படிச் செய்தாய் என்று கேட்கிறாள் தலைவி!

17 May 2014

2. அருணாசல அட்சரமணமாலை

2. அழகு சுந்தரம்போல் அகமும் நீயும் முற்று
    அபின்னமாய் இருப்போம் அருணாசலா


முதல் கண்ணியில் 'அகமே நினைப்பவர்' என்றார். 
அகத்தில் நினைப்பவர் இதயத்தில் எப்படி இருப்பார்? 
அழகு சுந்தரமாய் இருப்பார்களாம். அழகு, சுந்தரம் இரண்டும் இருவேறு சொற்களானாலும் பொருள் ஒன்றே! 
என் அகத்தில் இருக்கும் நீயும், நானும் இருவராய் இல்லாமல் ஒருவராய் இருப்போம்.
பின்னம் பிரிக்கக் கூடியது ஆதலின் அபின்னமாய் பிரிக்கமுடியாதவர்களாய் இருப்போம்.
ஶ்ரீரமணரின் தாய் அழகம்மை, தந்தை சுந்தரம். மனம் ஒருமித்து வாழ்ந்த அவர்களைப் போல் 
'என் அகமும் நீயும் ' பிரிக்க முடியாதவர்கள்!
மலை உருவில் உயிரற்றதாக  விளங்கும் நீயும்,  உயிருள்ள மனிதனாக விளங்கும் நானும் உண்மையில் பார்க்கப் போனால் ஒரே பொருளாகிய ஆன்மாவே.
அருணாசலனும் தானும் பிரிக்க இயலாது ஒன்றானதை இங்கே குறிப்பிடுகிறார்.



16 May 2014

1. அருணாசல அட்சர மணமாலை

அருணாசலசிவ     அருணாசல சிவ
      அருணாசலசிவ    அருணாசலசிவ

'ஓம்' என்ற பிரணவத்தின் முதல் எழுத்து  அகரம் ஆகும். அ+ உ+ ம்= ஓம். பிரபஞ்சம் முழுமைக்கும் ஆதாரம் பிரணவமே!
தமிழின் முதல் எழுத்து அகரமே.
'அகர முதல எழுத்தெல்லாம்' எனத் தொடங்குகிறது திருக்குறள்.
அருணாசலத்தின் முதல் எழுத்து 'அ'கரம்.
அதுவே அக்ஷரமணமாலையின் முதலெழுத்து.
முதல் மூன்று கண்ணிகளிலும் மூன்றுமுறை அகரம் வருகிறது.

1. அருணாசலமென அகமே நினைப்பவர் 
    அகத்தை வேரறுப்பாய் அருணாசலா

நினைத்தாலே முக்தி தரும் தலம் அருணாசலம். அருணாசலம் என்று ஒருமையுடன் மனதில்  நினைப்பவர்களின் அகந்தையை வேரோடு அழிப்பவன் அருணாசலன்.

என்னால்தான் அனைத்தும் நடக்கிறது, என்று எண்ணுவது மனித இயல்பு. எல்லோரும் தாங்கள் சொல்வதும் செய்வதும்தான் சரியானது, என்று தங்களைப் பற்றிமட்டும் உயர்வாக நினைக்கிறார்கள். அதுவே அகந்தை எனப்படும். தான் என்ற உணர்வை ஏற்படுத்துவது  அகந்தை. அதை அழித்தால்தான் ஆண்டவனைக் காண முடியும்.
அகந்தையை மனித யத்தனத்தால் அழிக்கமுடியாது. அருணாசலனை உணர்ந்து  அவனாலே அனைத்தும் நடக்கிறது என்பதை அறிந்து, அவனிடம் சரணடைந்தால் அவர்களது அகந்தையை அருணாசலன் வேரோடு அழிப்பான்.



15 May 2014

அருணாசல அட்சர மணமாலை - காப்புச் செய்யுள்

அருணாசல வரற்கேற்ற அக்ஷரமண மாலை சாற்ற
கருணாகர கணபதியே கரமருளிக் காப்பாயே

வரன் - சிறந்தவன், தலைவன், நாயகன்; அக்ஷயம் - சிறந்தது, சாற்ற - அணிவித்தல், சொல்லுதல்.

எந்த ஒரு செயலைச் செய்தாலும் , செய்யும் செயல் வெற்றி பெற விநாயகரை வணங்குவது வழக்கம்.
அதே போல மிகச் சிறந்த (வரன்) தலைவனாகிய அருணாசலனுக்கு, பொருத்தமான தமிழ் எழுத்துக்களால் கட்டப்பட்ட  மணமாலையை வாய் நிறையச் சொல்லி மகிழவும், அணிவிக்கவும்  கருணை நிறைந்த விநாயகப் பெருமானே, உன் திருக்கரங்களால் ஆசி வழங்கி  அருள் புரிவாய்.



Invocation
Gracious Ganapati with Thy (loving) hand bless me, that I may make this a marital garland of letters worthy of SriArunachala, the Bridegroom!
( Translation courtesy Ramanasramam)

14 May 2014

அருணாசல அட்சரமணமாலை- பாயிரம்

                                                                                பாயிரம்
(முகவைக் கண்ன முருகனார் அருளியது)

தருணா ருணமணி கிரணா வலிநிகர்
தரும் அக்ஷரமண மகிழ்மாலை
தெருணா டியதிரு வடியார் தெருமரல்
தெளியப் பரவுதல் பொருளாகக்
கருணா கரமுனி ரமணா ரியனுவ
கையினாற் சொலியது கதியாக
அருணா சலமென அகமே அறிவொடும்
ஆழ்வார் சிவனுல காள்வாரே.

விண்ணிலே பவனி வருகிற இளஞ்சூரியக் கிரணங்களின் ஒளி வரிசை போல, ஒளி பொருந்திய அக்ஷரங்களால் ஆன மனதை மகிழ்விக்கும்  சொல் மாலை! உண்மையான அடியார்களின் மனக் கலக்கம் நீங்குவதற்காக, கருணை நிறைந்த ரமண முனிவர் தனக்கு அருணாசலர் மீது உண்டான பிரேமையினால் மனமகிழ்ந்து இப்பாமாலையை அருளினார். இதனைப் பாடி அருணாசலம அகம் என தியானித்து  தன்னுள்ளே ஆழ்பவர்கள்  சிவனுலகு ஆளப்பெறுவர்.

அடியவர்களின் மனதிலே எழுகின்ற பல வினாக்களுக்கும் விடை சொல்லித் தெளியவைப்பதற்காக,
ஶ்ரீ ரமணரால்  பாடப்பட்டது அருணாசல அஷரமணமாலை.  சூரிய கிரணங்கள் போல் ஒளிவீசி, மனதைத் தெளிவடையச் செய்வது ரமணமாலை. இதனை ஓதுபவர் தன்னுடைய ஆன்மாவே அருணாசலமாய்
ஒளிவீசுவதை உணர்வர். உணர்பவர் பரசிவத்தையும் அறிவர்.

THE MARITAL GARLAND OF LETTERS

This joyful marital garland of letters which resembles a beam of the rays of the rising  sun was sung by the noble Sage Ramana, the ocean of compassion, with the object of removing the delusion of the devotees who sought his grace.  Those who look upon it as their sole refuge will realize within themselves that they are  Arunachala and will reign in the world of Siva.

( Translation courtesy Sri Ramanasramam)







13 May 2014

அருணாசல அட்சரமணமாலை- ஶ்ரீ ரமண மகரிஷி


அட்சரமணமாலையின் மலர்களைக் கண்டும், நுகர்ந்தும் நம்மை  மறந்து இன்புறுமுன் அம்மாலையை அருணாசலனுக்கு அணிவித்து அழகு பார்த்த   ஶ்ரீரமணரது சரிதத்தை மிகச் சுருக்கமாகக் காண்போம்.

அம்மை மீனாட்சி அருளாட்சி புரியும் மதுரைமாநகரில் இருந்து 30 கல்தொலைவில் உள்ளது திருச்சுழி என்னும் கிராமம்.1879 ஆம் ஆண்டு, டிசம்பர் 30 ஆம் நாள். அதாவது  பிரமதி வருடம், மார்கழி 16, இரவு 1 மணி.  ஆருத்ரா தரிசன நாள் என சைவர்கள் கொண்டாடும் திருவாதிரைத் திருநாள்!
அந்த புனிதமான விடியலில் திரு. சுந்தரம் ஐயருக்கும், அழகம்மைக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவர்தான் ஶ்ரீ ரமணமகரிஷி. அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வெங்கடராமன்.

சிறுவயதில் படிப்பில் அதிக ஆர்வமற்றும், விளையாட்டுகளில் தீவிர கவனம் செலுத்துபவராயும் இருந்தார் வெங்கடராமன். ஒரு நாள் அவர் குடும்ப சினேகிதரை வழியில் பார்த்ததும்,'எங்கிருந்து வருகிறீர்கள் எனக் கேட்க, அவர் 'அருணாசலம்' என்றார். அது எங்கே உள்ளது என்று கேட்க, 'ஓ, உனக்கு திருவண்ணாமலையைத் தெரியாதா? அதுதான் அருணாசலம்'' என்று சொல்ல ஶ்ரீ ரமணரின் இதயம் சில்லிட்டது. மனம் துள்ள, இனம் புரியாத இன்பம்  ஏற்பட்டது.

ஒருசில மாதங்களுக்குப் பின் வீட்டிலிருந்த 'பெரியபுராணம்' புத்தகம் அவர் கையில் கிடைத்தது. அதுவே அவர் படித்த மதம் சார்ந்த முதல் புத்தகமாகும். அறுபத்து மூன்று நாயன்மார்களின் அசைக்க முடியாத இறை நம்பிக்கையும், ஆழ்ந்த பக்தியும், தானென்ற அகந்தையற்ற சரணாகதியும், உள்ளுணர்வால் இறைவனுடன் கொண்ட தொடர்பும், இறைவனின் கருணையும் அவரைக் கவர்ந்தன.

1896!
17 வயது வெங்கடராமனுக்கு ஒரு அதிசயமான அனுபவம் ஏற்பட்டது. அதுவே அவர் வாழ்க்கையை மாற்றி அமைத்தது. அவருடைய அனுபவத்தை அவரே சொல்லக் கேட்போம்.
''என் மாமாவின் இல்லத்து முதல் மாடியில் ஒரு நாள் நான் அமர்ந்திருந்தேன். நல்ல ஆரோக்யமான உடல் என்னுடையது. நோய்நொடிகளால் நான் துன்புற்றதில்லை . ஆனால் அன்று திடீரென்று எனக்கு மரணபயம் ஏற்பட்டது. உடனே மரணிக்கப் போவது எது? இந்த உடலா? அதையும் பார்ப்போம்  என்று தோன்ற நான் கைகால்களை நீட்டிப் படுத்துக் கொண்டேன். மூச்சை அடக்கிக் கொண்டு, வாயை இறுக மூடிக்கொண்டேன். சரி, இந்த உடம்பு இறந்துவிட்டது. மயானத்துக்கு எடுத்துச் சென்று இதனை எரித்து விடுவார்கள். இந்த உடல் பிடி சாம்பல் ஆகிவிடும். ஆனால் இந்த உடம்பு இறந்தாலும் 'நான்' இறந்தேனா? நான் இந்த உடலா? இந்த உடல் அசையாமல் அமைதியாய்க் கிடக்கிறது! உடல் உணர்வின்றி 'நான்' என்ற உணர்வுமட்டும் மேலோங்குகிறது. அப்படியென்றால் இந்த 'நான்' எனும் உணர்வு என்ன? 'நான்' யார்? நான் என்பது ஆத்ம சொரூபமே! இந்த உடல் மரணிக்கும், ஆனால் நானென்ற ஆன்ம உணர்வுக்கு மரணமில்லை. நான் மரணமற்ற ஆன்மா.

உடனே மரணபயம் நீங்கிற்று. ஆனால் 'நான்' என்ற ஆதாரசுருதி என்னை ஆள ஆரம்பித்தது. மற்ற எண்ணங்கள் வந்து போயினும் 'நான்' என்ற ஆன்ம உணர்வே  நின்றது. பேசினாலும், படித்தாலும், எந்த வேலை செய்தாலும்  என் ஆன்மாவிலேயே என் மனம் நிலைத்து நிற்க ஆரம்பித்தது.''

படிப்பிலே நாட்டம் குறைந்தது. மனம் தியானத்திலிருந்து விடுபட முடியாமல் போயிற்று. வெங்கடராமன் ஒரு நாள் வீட்டைவிட்டு வெளியேறி திருவண்ணாமலையை அடைந்தார். 'அப்பனே, உன் ஆணைப் படி உன்னிடம் வந்துவிட்டேன். இனி உன் பொறுப்பு,' என சரணாகதி அடைந்தார்.
அருணாசலத்தின் பல பகுதிகளில் தங்கினார். உணவுக்காக அவருடைய அன்பர்கள் ஊருக்குள் செல்லும் போது பாடுவதற்காக ஒரு பாடல் வேண்டுமென்றனர். ஒருநாள் கிரிவலம் வருகையில் அருணாசலன் மீது தாம் கொண்ட அன்பின் மிகுதியால் உணர்ச்சி மேலோங்க ஶ்ரீரமணர் பாடிய 108 கண்ணிகளே அருணாசல அட்சரமணமாலை.

திருவாசகம், திருவருட்பா, திருமந்திரம், திருப்புகழ், தேவாரம், நாலாயிர திவ்யப்பிரபந்தம் அனைத்துமே  பக்திரசம் சொட்டச் சொட்டப் பாடப்பட்ட தமிழ்ப் பாமாலைகள் தான். என்றென்றும் வாடாத சொல்மாலைகள். இறைவனுக்குச் சூட்டப்பட்ட மணமாலைகள்!

அருணகிரிநாதர் ஒரு திருப்புகழில்,'ஆசைமிகுந்த பக்தனாகிய நான் மனதாகிய தாமரை மலரை, அன்பான நூல்கொண்டு, நாவினால் சித்திரம் போல் கட்ட, அவை ஞான வாசம் வீசிப் பிரகாசிக்க, தூய்மையான பக்தர்களுடை மனம் ஆனந்தமடைய,  'மாத்ருகா புஷ்ப மாலையை,' உன் அழகிய பாதங்களில் அணிவிக்க மாட்டேனோ? ' என்று உள்ளம் உருகப் பாடுகிறார்.

அருணாசல அட்சரமணமாலை ஶ்ரீ ரமணபக்தர்களால் தினந்தோறும் அருணாசலத்திற்கு அர்ப்பணிக்கப் படுகிறது. நாமும் அணிவிப்போம். அட்சரமணமாலை, ரமணமாலை, மணமாலை. மாலை சூடுவோம்.

அருணாசல சிவ அருணாசலசிவ அருணாசல சிவ அருணாசலசிவ அருணாசலா.

















12 May 2014

அட்சரமணமாலை - திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் திருக்கோயில்



"அதுவே தலம் அருணாசலம் தலம் யாவிலும் அதிகம்
அது பூமியின் இதயம் அறி; அதுவே சிவன் இதயப்
பதியாம் ஒரு மருமத்தலம் பதியாம் அவன் அதிலே
வதிவான் ஒளி மலையா நிதம் அருணாசலம் எனவே" -அருணாசல மகாத்மியம்

பெங்களூரிலிருந்து பாண்டிச்சேரி ( புதுச்சேரி) செல்லும் வழியில் செங்கம் சாலையில் உள்ளது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் தலம் எனப் பெருமை பெற்ற இத்தலம் தென் கயிலாயம் எனவும் போற்றப் படுகிறது.

இங்குள்ள அருணாசலேஸ்வரர் ஆலயம்  பஞ்சபூதத் தலங்களில் ஒன்று. லிங்கம் தேஜோலிங்கம் எனப்படுகிறது. அதாவது (நெருப்பு) ஒளிவடிவ லிங்கம்! ஆறு ஆதாரத் தலங்களில் மணிபூரகத் தலம்.

 புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்தின்படி இமயமலை தோன்றுவதற்கும் முந்தைய காலத்தது. பல மில்லியன் வருடங்களுக்கு முன்னரே, சுமேரிய கண்டத்தினை அழித்த சுனாமி அலைகளால் தொடப்படாதது என அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் அறிவிக்கப் பட்டது.

திருவண்ணாமலையின் சிறப்பு யாது? மலையே சிவலிங்கமாகப் போற்றப் படுகிறது.  2682 அடி உயரமுள்ள இம்மலை சிவந்த மலை. அருணா -சிவப்பு, அசலம் - மலை. சிவப்புமலை!  
அண்ணாமலை பரசிவத்தின் ரகசிய இதயத்தானம் எனப்படுகிறது. சிவபெருமான் செந்நிறமான தூணாய் அடி முடி காண இயலாதவராக உருவெடுத்த கதை அனைவரும் அறிந்ததே. சிவ பெருமான் பிரம்ம விஷ்ணு தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மலை உருவாய் தன்னைக் குளிர்வித்துக் கொண்டாராம். கதையை விட்டுவிடுவோம்.

வெகு தூரத்திலிருந்து பார்க்குங்கால் வெண்மேகங்களின் அரவணைப்பில் வெண்ணீரணிந்தவனின்
முகம் காட்டும், அருகிலோ செம்மை காட்டும்!

''பைம் பொன்னே பவளக்குன்றே பரமனே பால் வெண்ணீற்றாய், செம்பொனே'' என வர்ணிக்கிறார் திருநாவுக்கரசு அடிகள்.

13 கிலோமீட்டர் சுற்றளவு உடைய இம்மலை பலசிகரங்களையும், சிறு குன்றுகளையும், குகைகளையும், மரச்சோலைகளையும், தீர்த்தங்களையும், சிறு அருவிகளையும் உடையது. ஆங்காங்கே பாராங்கற்களும் உள்ளன. இம்மலையைச் சுற்றி எட்டுத் திசைகளிலும் சிவலிங்கங்கள் உள்ளன. சூரிய லிங்கமும் உள்ளது.
இம்மலையை பெளர்ணமியன்று சுற்றி வருவது நலம்தரும் என நம்பப்படுகிறது. 

இம்மலை அடிவாரத்தில் அருணாசலேஸ்வரரின்  கோயில் காணப்படுகிறது. 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில் தமிழ் நாட்டின் மிகப் பெரிய கோயிலாகும்.ராஜ கோபுரம் 217 அடி உயரத்துடன் 11 அடுக்குகள் கொண்டது. ஆறு பிரகாரங்களும், ஒன்பது  கோபுரங்களும் உள்ளன.

'கிரி  உருவாகிய கிருபைக் கடலே, கீழ்மேலெங்கும் கிளரொளி மணி, கருணைமாமலை,' என்றெல்லாம் 
போற்றுகிறது மணமாலை.

இம்மலையே சிவலிங்கம். இம்மலையை ஆன்மாவாகக் காண்பவர் உள்ளத்தில் ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடும் என்பதில் ஐயமில்லை.

அருணாசல அருட்பெருஞ் சோதி. 










6 May 2014

அடுத்து வரவுள்ள வலைப் பதிவு - அறிமுகம்

 ஶ்ரீ ரமணரின் அருணாசல அட்சரமணமாலை.

மெளனத்தால் தன்னை நாடி வந்தவர்களுக்கு உபதேசம் செய்த  மகாயோகி
ஶ்ரீரமணர்.
நினைத்தாலே முக்திதரும் திருவண்ணாமலை புனிதமான தலம். 
அட்சரமணமாலை ஶ்ரீபகவான் அருணாசலேசுவரன் மீது எழுதிய 
முதல் தோத்திரப் பாமாலை. 
ஆன்ம சமர்ப்பணத்திற்கு வழி கோலும் சொல்மாலை.
108 முறை அருணாசல நாமம் வருவதால் மந்திரம் ஓதிய பலனைத் தருவது,
'அ' என்ற தமிழ் எழுத்தில் ஆரம்பித்து  அருணாசல சிவநாமத்தில் நிறைவு பெறுகிறது.
இருவரிக் கண்ணிகளாக மனனம் செய்யவும், நினைவில் நிறுத்திக்கொள்ளும் வகையிலும் அமைந்துள்ளது.
பக்தியுடன் இதனைப் படிப்பவர்கள் அருணாசலனுக்கு அணிவிக்கும் 'மணமாலை'யாக விளங்குகிறது.

அமைதிப் பேரலைகளில் மூழ்கச்செய்யும் அன்னை, அரவிந்தர் சமாதி, ஶ்ரீரமணபகவானின் தியான அறை,
வடலூர் வள்ளலார் கடைசியாகத் தாளிட்டுக் கொண்டமேட்டுக் குப்பத்து 'சோதி' அறை இம்மூன்று இடங்களும் அளிக்கும் ஆழ்ந்த ஆனந்தத்தை, அமைதியை நான் வேறு எந்த ஆலயத்திலும் அடைந்ததில்லை! ஶ்ரீஅரவிந்த ஒளி, ஶ்ரீஅருணாசல ஒளி, ஶ்ரீராமலிங்க ஒளி, முக்கோணத்தில் ஒளிரும் ஒளி!

1990 களில் முதன்முறையாக 'அட்சரமணமாலை' புத்தகம் எனக்குக் கிடைத்தது.. நூற்றாண்டு கொண்டாடும் இந்நூலை அப்போது படித்தபோது எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்துக்கு அளவே இல்லை! எளிதில் மனப்பாடம் செய்யவும், அரிய அமைதியை அளிக்கவும் வல்ல இந்நூலுக்கு பலரும் உரை எழுதியுள்ளனர்.
 ஆன்மாவே அருணாசலம்! அருணாசலனுக்கு ஆத்மார்த்தமாக சமர்ப்பிக்கும் அட்சர மலர்களால் ஆன மாலை, ரமண மாலை, மணமாலை, அட்சரமணமாலையை வலைப் பதிவு செய்ய வேண்டும் எனத்தோன்றியதால் இதனை எழுத முயன்றுவருகிறேன்.

வரும் வாரம் முதல்...................!








2 May 2014

திருவருட்பா - ஐந்தாம் திருமுறை - சண்முகர் கொம்மி - 1

இராகம் -ஆனந்தபைரவி - ஆதி தாளம்

குறவர் குடிசை நுழைந்தாண்டி - அந்தக் கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
துறவர் வணங்கும் புகழாண்டி - அவன் தோற்றத்தைப்  பாடி அடியுங்கடி.

மாமயி லேறி வருவாண்டி -அன்பர் வாழ்த்த வரங்கள் தருவாண்டி
தீமை யிலாத புகழாண்டி - அவன் சீர்த்தியைப் பாடி யடியுங்கடி.

பன்னிரு தோள்க ளுடையாண்டி - கொடும் பாவிகள் தம்மை அடையாண்டி
என்னிரு கண்க ளனையாண்டி - அவன் ஏற்றத்தைப் பாடி அடியுங்கடி.

சீர்திகழ் தோகை மயின்மேலே - இளஞ் செஞ்சுடர் தோன்றுந் திறம்போலே
கூர்வடி வேல்கொண்டு நம்பெருமான் - வருஞ் கோலத்தைப் பாருங்கள் கோதையர்காள்.
                                                                                   
அருட்பெருஞ் சோதி தனிப்பெருங்கருணை.

1 May 2014

திருவருட்பா - சின்னம் பிடி

அம்பலவர் வந்தார் என்று சின்னம் பிடி
அற்புதம் செய்கின்றார் என்று சின்னம் பிடி

சிற்சபையைக் கண்டோம் என்று சின்னம் பிடி
சித்திகள் செய்கின்றோம் என்று சின்னம் பிடி

பொற்சபை புகுந்தோம் என்று சின்னம் பிடி
புந்தி மகிழ்கின்றோம் என்று சின்னம் பிடி

ஞானசித்திபுரம் என்று சின்னம்பிடி
நாடகம் செய் இடம் என்று சின்னம் பிடி

அப்பர் வருகின்றார் என்று சின்னம்பிடி
அற்புதம் செய்வதற்கென்று சின்னம்பிடி

அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை.