23 May 2014

8. அருணாசல அட்சர மணமாலை

8. ஊர் சுற்று உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட
         உன்னழகைக் காட்டு அருணாசலா

உன்னை ஏமாற்றி ஓடாது உள்ளத்தை உறுதியாக இருக்குமாறு,
பிடித்துவைத்துக் கொள் என்றவர்
மீண்டும் தன் உள்ளத்தைப் பற்றிச் சொல்கிறார்.
மனம் குரங்கு போல் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவும்.
இருந்த இடத்தில் இருந்தபடி ஓயாது ஊர் சுற்றும்!
உள்ளம் ஊர் சுற்றுகிறதா?

அப்படியென்றால்?

வள்ளலார் மிக அழகாக  மனதைப் பற்றிச் சொல்கிறார்!
''மனமான ஒரு சிறுவன் சும்மாவிரான்,
காம மடுவிடை வீழ்ந்து சுழல்வான்,
சினமான வெஞ்சுரத்தில் உழல்வான்,
லோபமாம் சிறு குகையில் புகுவான்,
மோக இருளிடைச் செல்குவான்,
மதமெனும் செய்குன்றில் ஏறிவிழுவான்,
சிறிதும் என் சொல் கேளான்,
என் கைக்கு அகப்படான்,
இதற்கு ஏழையேன் என் செய்குவேன்?
என்னால் ஒன்றும் செய்யமுடியாது!"
எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதானே இது!

ஊர் சுற்றும் உள்ளத்தைக் காப்பாற்ற, அடக்க  என்ன வழி?
அருணாசலமே!
அது உன்னால்தான் முடியும்!
நீ வரவேண்டும்! உன்னுடைய அழகைப் பார்த்தவுடன்
என் உள்ளம் அப்படியே அடங்கி
உன் பாதங்களில் சரணாகதி அடைந்துவிடும்.
எனவே ஊர்சுற்றும் என் உள்ளத்தை அவ்வாறு செய்யவிடாமல்
உனதழகைக் காட்டி ஆட்கொள்வாயாக.

பிறையணி சடையினானைக் காண்பவர்க்கு வேண்டுவதும் வேறுளதோ?








No comments:

Post a Comment