30 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கைச்சினம்

                                    - நையுமன
மைச்சினத்தை விட்டோர் மனத்தில் சுவைகொடுத்துக் 
கைச் சினத்தின் உட்கரையாக் கற்கண்டே-

வாயில் இட்டால் கரையாத கற்கண்டு எனும் இனிப்புக் கட்டி இவ்வுலகில் எங்கேனும் கிடைக்குமா?
ஆம் கிடைக்கும்!
இதயத்தில் சிவமாகிய, கரையாத கற்கண்டின் அருளைச் சுவைக்க வல்லாருக்கு எப்போதும் இன்பமே!
மனிதனின் தரத்தைக் குறைக்க வல்லது சினமெனும் குணம்! 'தன்னைத்தான் காக்கின் சினம் காக்க' என்கிறது வள்ளுவம். தன்னிலை இழக்கும்போது சினம், பல பாதகங்களுக்குக் காரணமாகிறது.
எனவே மனதில் எழும் குற்றமான சினத்தைக் கைவிட்டவர்களுடைய இதயத்தில் கற்கண்டின் சுவையாய் இன்பம் தரும் சிவம். திருக்கைச் சினம் எனும் ஊரில் கரையாத கற்கண்டாய் இன்பம் அளிக்கிறான் சிவபெருமான்.
கச்சனம் என்றும் அழைக்கப்படும் இவ்வூர் திருவாரூர்- திருத்துறைப்பூண்டிச் சாலையில் உள்ளது.
இங்கு இந்திரன் மணலினால் லிங்கம் அமைத்துப் பூசித்து, அதனைக் கையினால் எடுத்து அப்புறம் வைக்கும் பொழுது அவனுடைய கைவிரல்கள் சின்னமாக அதில் பதிந்ததால் இறைவன் கைச்சி னநாதர்  என அழைக்கப்படுகிறார்.தலம்  கைச்சின்னம். சினமாகிய குணத்தை விட்டொழித்தால்,
கைச்சின்னநாதர் அருள் பொழிவார். ஓரெழுத்தில் விளையாடும் இன்பத்தமிழ்!

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி



29 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவலிவலம்

திருவாரூருக்குத் தென்கிழக்கில் உள்ள இத் தலத்தை,        
''தொண்டனேன் அறியாமை அறிந்து
கல்லியல்  மனத்தைக் கசிவித்துக் கழலடி
காட்டி என் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்க நின்றானை
வலிவலம் தனில் வந்து கண்டேனே'' என்று சுந்தரர் மனம் உருகிப் பாடியுள்ளார்.
மாடக்கோயில் வலியன் என்ற கரிக்குருவி வழிபட்டதால் வலிவலம் என்று பெயர். மூவர் பாடல் பெற்ற இத்தலத்தை வள்ளல் பெருமானர் என்ன சொல்லிப் பாடுகிறார்?

                                   - துன்றாசை
வெய்ய வலிவலத்தை வீட்டியன்பர்க்கு இன்னருள் செய்
துய்ய வலிவலத்துச் சொல்முடிபே -

மனித மனம் பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசைகளால் நிறைந்து கிடக்கிறது. இந்த
ஆசைகள் வலிமையானவை. மனிதனை வீழ்த்தும் தன்மையுடையவை. இவ்வாசைகளை எல்லாம்
'வீட்டி' (அழித்து) அன்பர்களுக்கு இன்னருள் செய்து அருள் மயமாய் விளங்குகிறான் திருவலிவலத்து
சிவபெருமான்.
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் -அருட்பெருஞ் சோதி


28 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

கன்றாப்பூர்
                                   - வீறாகும்
இன்று ஆப்பூர் வந்தொட் டிருந்தது இவ்வூர் என்னவுயர்
கன்றாப்பூர் பஞ்சாக்கரப் பொருளே -

பஞ்சாக்கரப் பொருள்- 'நமசிவாய' என்ற திருவைந்தெழுத்தின் பொருள்.
ஆப்பு - முளைக்கம்பு ( மாடு, கன்றுகளைக் கட்டும் கம்பு)
வலிமையுடன்  ஆப்பிலிருந்து தோன்றிய காலம் முதல் இன்று வரை சிறந்து விளங்கும் ஊர் என அறிந்தவர் கூறும் சிறப்புடையது திருக்கன்றாப்பூர்  என்னும் இவ்வூர்.

சைவ சமயத்தைச் சார்ந்த பெண் ஒருத்தி வைணவ சமயத்தைச் சார்ந்த ஒருவரை மணந்தாள்.
அவள் தன் கணவன் வீட்டாருக்குத் தெரியாமல் சிவலிங்க வழிபாடு செய்து வந்தாள். எப்படியோ
கணவனுக்கு இது தெரியவர அவன் அச்சிவலிங்கத்தைக் கிணற்றில் எறிந்து விடுகிறான்.
அந்தப் பெண்ணோ விடாமல் கன்றுக்குட்டி கட்டியிருந்த முளைக்கம்பையே (ஆப்பு) சிவனாகப்
பாவித்து பூஜை செய்து வந்தாள். அதைக் கண்ட அவள் கணவன் அந்த ஆப்பை வெட்ட
சிவபெருமான் அந்த ஆப்பிலிருந்து வெளிப்பட்டார் எனவும், அதனால் ஊரின் பெயர் கன்றாப்பூர் (கன்று+ ஆப்பூர்) என்றும் சொல்கிறார்கள். இறைவனுக்கு 'நடு தறி நாதர்' எனப் பெயர். கோடாரியால் வெட்டிய குறி இறைவன் மேல் உள்ளது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி
  

26 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்காறாயில்

                          - நாட்டுமொரு
நூறாயில் அன்பர்தமை நோக்கி அருள்செய் திருக்
காறாயின் மேலோர் கடைப்பிடியே -

ஆராய்ந்து பார்க்கும் போது நூல்கள் சொல்லும் செய்தி என்ன?
தன்னை வழிபடும் அன்பர்களைத் தாய் போலக் கருணையுடன்
பார்த்து இறைவன் அருள் செய்வான் என்பதாகும்.
( அன்பர் தமைத் தாய் போல் நோக்கி)
 இதனை உணர்ந்து தன்னை வழிபடும் அன்பர்களுக்கு
 திருக்காறாயிலில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான்
 அருள்புரிகிறான்.

இவ்வூர் திருக்காறாவாசல் என அழைக்கப்படுகிறது.
ஆதி விடங்கத் தலம்.நடனம் குக்குட நடனம். மரகத
லிங்கம் சிறப்பு.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

25 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநாட்டியத்தான்குடி

                                   - எல்லைக்கண்
சேட்டியத்  தானேதெரிந்துசுரர்  வந்தேத்தும்
நாட்டியத் தான்குடிவாழ் நல்லினமே -

சேட்டியம்- படைத்தல், காத்தல், அழைத்தல் ஆகிய முச்செயல்களையும் செய்தலும், செய்விப்பதும் ஆகும்.
உலகம் அழியும் ஊழி முடிவின் போது (முச்செயல்களையும் )செய்கிறார் இறைவன்.உலகத்து உயிர்களை ஒழுங்கு படுத்துவதன் முதன்மை அறிந்து தேவர்கள் வந்து திருநாட்டியத்தான் குடியில் கோயில் கொண்டிருக்கும்  சிவபெருமானை வணங்குகின்றனர்.

இவ்வூர் மாவூர் புகை வண்டி நிலையத்திலிருந்து 6 கி.மீ. தெற்கில் உள்ளது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

24 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநெல்லிக்கா

                                                - ஓங்குமலை
வல்லிக்காதார மணிப்புயவென்று அன்பர் தொழ
நெல்லிக்கா வாழ்மெய்ந் நியமமே -

ஓங்கி நெடிதுயர்ந்த மலையரசனின் மகளான உமையம்மைக்கு ஆதாரமாகத் தன் அழகிய மணித் தோள்களை அளித்தவன் என்று அன்பர் தொழ திருநெல்லிக்கா என்னும் திருப்பதியில் மெய்ப்
பொருளான இறைவன் வாழ்கிறான்.

நெல்லி மரங்கள் சூழ்ந்த சோலையாக இருந்ததால் நெல்லிக்கா என்று பெயர் வந்தது. திருநெல்லிக்காவல் என்றும் வழங்கப்படுகிறது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

23 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

தேங்கூர்
                                -  நீட்டும் ஒளி
ஆங்கூ ரிலைவே லவனா தியர்சூழத்
தேங்கூரில் வாழ்தேவ சிங்கமே -

கூர்மையான இலை போன்ற அமைப்பை உடையது முருகப் பெருமானின் வேல்.ஒளி பொருந்திய அவ்வேலைக் கையில் ஏந்திய முருகப் பெருமானுடன் தொண்டர் குழாம் சூழ்ந்து வழிபட தேங்கூர் எனும் பதியில் கம்பீரமாக வாழும் சிவபெருமானே உம்மை வணங்குகிறேன்.

இவ்வூர் தெங்கூர் எனவும் வழங்கப்படுகிறது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி 

22 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கொள்ளிக்காடு
                                       - தாம்பேரா
வீட்டிலன்பர் ஆனந்தம் மேவச் செயும் கொள்ளிக்
காட்டில் அம்ர்ந்த என்கண் காட்சியே -

பேரா வீடு -நிலையான பேரின்ப வீடு, பெயர்தல் அற்றது.
நிலையான பேரின்ப வீட்டில் என்ன கிடைக்கும்? எப்பொழுதும் அனுபவிக்கக் கூடிய சிவானந்தம் கிடைக்கும்!
 தரிசனம் செய்யும் கண்களுக்கு ஆனந்தம் நல்கும் சிவபெருமான் திருக்கொள்ளிக்காடு எனும் பதியில் அமர்ந்து, அடியார்களை நிலையான பேரின்பம் அனுபவிக்கச் செய்கிறான்.

கள்ளிக்காடு என்று வழங்கப்படுகிறது. அக்னி வழிபட்ட தலம் என்பதால் கொள்ளிக்காடு எனப் பெயர் பெற்றது. இங்கு சனிபகவான் சன்னதி சிறப்பு.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

21 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

பேரெயில்
                              -வெள்ளிடைவான்
வாம்பேர் எயில்சூழ்ந்த மாண்பால் திருநாமம்
ஆம்பேர் எயில்ஒப்பி லாமணியே -

வானவாம் பேரெயில் - வானத்தைத் தொடத் தாவும் பெரிய மதில் சுவர்.
'வாவும்' என்பது 'வாம்' என விகாரப்பட்டது. எயில்- கோட்டைச் சுவர்.

ஆகாயப் பெரு வெளி! கீழே பார்த்தால் வானைத் தொடத் தாவும் பெரிய மதில்சுவர்.
இத்தகைய பெரிய மதில் சுவரால் சூழப்பட்டிருக்கும் பெருமையுடைத்து பேரெயில்
எனும் இவ்வூர்.  இவ்வூரின் திருக்கோயிலில் எதனோடும் ஒப்பிடுவதற்கு அரியவரான
சிவபெருமான் கோயில் கொண்டுள்ளார். வானளாவிய மதிற்சுவரால்
பேரெயில் எனும் பெயர் வந்தது.
இவ்வூர் 'ஓகைப்பேரையூர்' எனவும் வழங்கும்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


20 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவெண்டுறை

                                          - தென்கூட்டிப்
போய்வண்டு உறைதடமும் பூம்பொழிலும் சூழ்ந்தமரர்
ஆய்வெண் டுறைமாசி லாமணியே -

 இனிமையாக ரீங்காரம் செய்யும் வண்டுகள் வசிக்கும் நீர் நிலைகள், மலர்ச்சோலைகள் சூழ்ந்த அழகிய திருவெண்துறையில் வீற்றிருக்கும் மாசு இலா மணியான  இறைவனைத் தேவர்கள் வணங்குவர்.

திருக்கொள்ளம்பூதூர்

                             - தோய்வுண்ட
கள்ளம்பூ தாதிநிலை கண்டுணர்வு கொண்டவர் சூழ்
கொள்ளம்பூ தூர்வான் குலமணியே -

பூதங்களை அடிப்படையாகக் கொண்டதத்துவக் கூறுகளில் தோய்ந்துள்ள பொய்மையை  உணர்ந்த,
மெய்யுணர்வு கொண்டவர்கள் திருக்கொள்ளம்பூதூர் குலமணியை வணங்குவர்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


  

19 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

தென்கோட்டூர்
                              - கொண்டலென
மன்கோட்டூர் சோலை வளர்கோட்டூர் தண்பழனந்
தென்கோட்டூர் தேவ சிகாமணியே -

மேகம் போல் பெருமை மிக்க நீர்க்கரைச் சோலை மரங்கள் அடர்ந்து வளர்ந்து காட்சியளிக்கின்றன.வரப்பினுள்ளே தண்மையான வயல்கள் மல்கிய அழகிய கோட்டூரில்
தெய்வ சிகாமணியான சிவபெருமான் வீற்றிருக்கிறார்.

திருத்துறைபூண்டி நிலையத்திலிருந்து 12 கி.மீ.தொலைவில் உள்ளது. கொழுந்தீசர் கோயில், மணியம்பலம் என இரு கோயில்கள் உள்ளன. மூலமூர்த்தியாக பிரதோஷ மூர்த்தி இருப்பது விசேஷமானது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி