5 July 2014

51.அருணாசல அட்சர மணமாலை

தொட்டருட் கைமெய் கட்டிடா யெனிலியான்
நட்டமாவேன் அருள் அருணாசலா

கைமெய் - மெய்கை உண்மையான கரங்கள்; கட்டிடாயெனில் -கட்டாவிட்டால், வேரொடு நீக்காவிட்டால்; நட்டமாவேன் - இப்பிறவிப் பயனை இழப்பேன்

அருள் நிறைந்த நின் திருக்கரங்களால் உண்மையான என் ஆன்மாவாய் விளங்கும் பரசிவத்தோடு, அகந்தையை வேரறுத்து என்னைக் கட்டியணைக்காவிடில், சேராவிடில் இந்தப் பிறவியால் என்ன பயன்?

உருவமற்ற இறைவனுக்கு கரங்கள் ஏது? எப்படி மெய்யைக் கட்டமுடியும்?
சூரிய ஒளியினால் எப்படி நமக்கு வெம்மை கிடைக்கிறது?ஒரு மலரில் உள்ள மென்மையான மணம் இருக்கும் இடத்தை நம்மால் காண முடியுமா? அது போல்தான் இறைவனின்'அருட்கை தொட்டு மெய் கட்டும்'.  காணமுடியாது!
''கருத்து மகிழ்ந்து என் உடலில் கலந்து,உளத்தில் கலந்து, கனிந்து உயிரில்கலந்து, அறிவில் கலந்து'' என்று இறையொளி தன்னோடு கலந்த பேரின்பத்தைப் போற்றுவார் வள்ளல் பெருமானார்.

No comments:

Post a Comment