16 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கடம்பூர்

                                                - பாரில்
உடம்பூர் பவத்தை ஒழித்தருளும் மேன்மைக்
கடம்பூர்வாழ் என் இரண்டு கண்ணே -

இப்பூவுலகில் மீண்டும் மீண்டும் பிறந்து படும் துன்பத்திலிருந்து விடுவித்து, சிவஞானம் அருளி
மேன்மையடையச் செய்யும் திருக்கடம்பூர் வாழ் சிவனே, என் இரு கண் போன்றானே.

மேலைக்கடம்பூர் என வழங்கப்படும் இப்பதி காட்டுமன்னார் குடியில் இருந்து எய்யலூர் செல்லும்
வழியில் உள்ளது.
இக்கோயிலின் கருவறை அடிப்பாகம் சக்கரங்களுடன் குதிரை பூட்டிய தேர் போன்ற அமைப்பில்
உள்ளது.இத்தலத்து இறைவன் அமிர்தகடேஸ்வரரை இந்திரனின் தாய் வழிபட்டு வந்தாள். தன் தாயின் மூப்பு கருதித் தாய் எளிதாக வழிபட குதிரைகளைப் பூட்டி இந்தக் கருவறையை இழுத்துச் செல்ல முயன்றான். ஆனால் விநாயகரை வழிபட மறந்ததால் தன் முயற்சியில் தோல்வியடைந்தான் என தல வரலாறு கூறுகிறது.
கடம்ப மரங்கள் அதிகமானதால் கடம்பூர் எனப்பட்டது. அங்காரக தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபட
தோஷம் நீங்கப் பெறுவார்கள்.

இங்கு அப்பர் பாடிய பாடல்
நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்கடன் அடியேனையும் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே.





No comments:

Post a Comment