13 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவோமாம் புலியூர்

                                             - விண்ணினிடை
வாமாம் புலியூர் மலர்ச்சோலை சூழ்ந்திலங்கும்
ஓமாம் புலியூர்வாழ் உத்தமமே -

வானை நோக்கித்தாவும் இயல்புடைய புலிகள் உலாவும் மலர்ச்சோலைகள் சூழ்ந்த ஊர்
வாமாம் புலியூர்! இங்கே கோயில் கொண்டிருக்கும் பரசிவத்தை வணங்குகிறேன்.

இப்பதி தில்லைக்கு தென்மேற்கில் 25 கி.மீ தொலைவில் கொள்ளிட வடகரைப்பகுதியில் உள்ளது.
உமையம்மைக்கு இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து பிரணவப் பொருளை உபதேசித்த தலம்
இது.

இறைவன் : துயர்தீர்த்தநாதர்
இறைவி    : அமிர்தவல்லியம்மை
தலமரம்     : இலந்தை
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

இத்தலத்தை அப்பர் 9 பாடல்கள் அடங்கிய பதிகம் ஒன்றால் பாடி சிவபெருமானைப் போற்றியுள்ளார்.
ஒரு பாடலைப் பார்ப்போமா?

அருந்தவத்தோர்  தொழுதேத்தும் அம்மான் தன்னை ஆராத இன்னமுதை அடியார் தம்மேல்
வருந்துயரந் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியையென் மருந்து தன்னைப்
பொருந்துபுனல் தழுவு வயல்நிலவு துங்கப் பொழில்கெழுவு தருமோமாம் புலியூர் நாளுந்
திருந்துதிரு வடதளியெஞ் செல்வன் தன்னைச் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.





No comments:

Post a Comment