15 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவானைக்கா

                                            -   நாற்றிசையும்
தேனைக்கா வுள்மலர்கள் தேங்கடலென்றா க்குவிக்கும்
ஆனைக்கா மேவியமர் அற்புதமே -

திருவானைக்கா என்ற ஊர் ஆனைகள் இருந்த சோலை எனப்பொருள்பட ஆனைக்கா எனப்படுகிறது.
இது நான்கு திசைகளிலும் சோலைகள் உள்ள ஊர். இச்சோலைகளில் நறுமணம் வீசும் மலர்கள். மலர்களிலோ தேன்! இவ்வாறு நாற்றிசை மலர்களிலிருந்தும் வழிகின்ற தேன் கடல் போல் காட்சி அளிக்கிறதாம்! 'தேன்கடலென்றாக்குவிக்கும்' ஆனைக்காவில் அற்புதவுருவினராய் விளங்குகிறார்
சிவபெருமான்.

திருச்சிராப்பள்ளி நகரில் காவிரி வடகரையில் அமைந்துள்ளது  இவ்வூர். இக்கோயிலின் கருவறை
காவிரி ஆற்று நீரின் மட்டத்துக்குக் கீழே இருப்பதால் நீர் ஊறிய வண்ணம் உள்ளது. இது பஞ்ச பூதத்
தலங்களில் அப்புத் தலம்.(அப்பு - நீர்) ஆதிசங்கரர் இங்கு யந்திரப் பிரதிஷ்டை செய்துள்ளார். அகிலாண்டேஸ்வரியின் உக்கிரத்தைத் தணிக்க கோயில் முன்பு விநாயகரைப் பிரதிஷ்டை செய்து, இரு செவிகளுக்கு ஆபரணமாக ஶ்ரீ சக்கரங்கள் இரண்டினைச் செய்து அவற்றைத் தாடங்கமாக அணிவித்துள்ளார். இக்கோயிலின் நான்காவது மதில் சுவர் முப்பத்திரண்டு அடி உயரம், எட்டாயிரம் அடி
நீளம் உடையது. இங்கு வெள்ளை யானையும், சிலந்தியும் வழிபட்டுள்ளன. சிலந்தியே மறுபிறவியில்
கோச்செங்கட் சோழனாய் பிறந்து முக்தி அடைந்தது என்பர்.

இறைவன் : ஜம்புகேஸ்வரர்
இறைவி    : அகிலாண்டேஸ்வரி
தலமரம்     : வெள்ளை நாவல் மரம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்




No comments:

Post a Comment