11 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவொற்றியூர்

                              -ஆள் அத்தா
வொற்றியூர் என்ன வினையேன் வினைதவிர்த்த
ஒற்றியூர் மேவியஎன் உள்ளன்பே -தெற்றிகளில்
பொங்குமணிக் கால்கள் பொலம்செய்திரு ஒற்றிநகர்
தங்கும் சிவபோக சாரமே - புங்கவர்கன்
சேர்ந்து வலங் கொள்ளும் திருவொற்றி யூர்க்கோயில்
சார்ந்து மகிழ்அமுத சாரமே - தேர்ந்துலகர்
போற்றும் திருவொற்றிப் பூங்கோயிற் குட்பெரியோர்
சாற்றும் புகழ்வேத சாரமே -

ஒற்றியூர் எத்தகையது?
''தெற்றிகளில்  பொங்குமணிக் கால்கள் பொலம் செய் திரு வொற்றி''!
தெற்றி எனில் தெருத் திண்ணை! திண்ணைகளில் பொன்னாலான கால்கள்! ( தூண்கள்)
அத்தூண்கள் மணிகள் கட்டப் பட்டு அழகாக விளங்குகின்றன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த, ஒற்றியூர்த் தலைவனே, என்னை ஆள்பவனே என்று நான் சொல்ல,துன்பங்களுக்குக் காரணமான தீவினைகளை எல்லாம் போக்கி என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து பொங்கிப் பெருகும் அன்பு மயமான இறைவனே.
மிகச் சிறந்த ஒழுக்கம் உடைய அடியார்கள் கூடி மகிழ்வோடு வலம் வரும்  ஒற்றியூரனே.
சிறந்தபதியெனத் தேர்ந்தெடுத்து பெரியோர்கள் சூட்டும் பாமாலைகளை அணிபவனே.
வேதங்களின் சாரமாகவும், அமுதத்தின் சாரமாகவும், சிவபோகசாரமாகவும் விளங்குபவனே.

வள்ளல் பெருமானுக்கு மிகவும் விருப்பமான ஊர் திருவொற்றியூர். ஒற்றியூரப்பனிடம் அவர் கொண்ட
பக்திச் சிறப்பை திருவருட்பாவை ஓதி அறியலாம்.

சென்னை மாநகரின் ஒருபகுதி ஒற்றியூர். பட்டினத்தார் முக்தியடைந்த தலம். தியாகேசரின் சிறப்பு சன்னதி உள்ள தலம். இச்சன்னதியில் திருமணங்கள் நடைபெறுகின்றன.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி







No comments:

Post a Comment