17 August 2014

92, 93 அருணாசல அட்சரமணமாலை

92. லட்சியம் வைத்து அருள் அஸ்திரம் விட்டு எனைப்
       பட்சித்தாய் பிராணனோடு அருணாசலா

லட்சியம் -இலக்கு, அஸ்திரம்- கருவி, பாணம், பட்சித்தாய் - உண்டாய்

என்னை இலக்காக வைத்து, அருள் என்ற அஸ்திரத்தால், 'நான்' என்ற அகந்தை உணர்வை
முழுமையாக அழித்து என்னைத் தன்வயமாக்கிக் கொண்டாய் அருணாசலா.
அருணாசலத் தந்தை தன் மகனாகிய ரமணரை இலக்காக வைத்து, அருளாகிய அஸ்திரத்தால் ஆட்கொண்டானாம்! போற்றுகிறார் அவதாரபுருஷர் ரமணர்.

93. லாபநீ இகபர லாபமில் எனைஉற்று
          லாபமென் உற்றனை அருணாசலா

எல்லாவற்றிலும் லாபநஷ்டக் கணக்கு பார்ப்பது மனித இயல்பு!
மனிதனுக்கு கிடைத்தற்கரிய இறையருள் கிடைப்பது பெரிய அதிர்ஷ்டமாகும்.
ஆனால் எல்லாம் வல்ல இறைவனுக்கோ மனிதர்களால் ஆகப் போவது ஏதும் இல்லை.
இதையே ஸ்ரிரமணர் இங்கு வினவுகிறார்.
'இந்தப் பூவுலகிலோ, மறு உலகிலோ என்னால் உனக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று
குறி வைத்து உன் அருள் அஸ்திரத்தால் என்னை ஆண்டுகொண்டாய்? சொல்வாய் அருணாசலா!

இறைவன் வள்ளல் பெருமானுக்கு ஞானக்கண்  கொடுத்தான்! பெருமானே,' உன்தயவை எண்ணுந்தோறும் என் இதயம் உருகித் தளதள என்று இளகித் தண்ணீராய் அருத்திப் பெருநீர் ஆற்றொடு சேர்ந்து அன்புப் பெருக்கில் கலந்தது,' என்று ஆனந்திக்கிறார் வள்ளலார்.

ஶ்ரீரமணர் ஆன்ம ஞானத்தால் பூரணமடைந்தவர். இறைவனோ பூரணமானவர்.முழுமையோடு முழுமை கலந்தால் அது முழுமையேயாகும் அன்றோ?







No comments:

Post a Comment