24 August 2014

104. அருணாசல அட்சர மணமாலை

104. அன்பொடு உன் நாமம் கேள் அன்பர்தம் அன்பருக்கு
          அன்பனாயிட அருள் அருணாசலா

இறைவனின் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும்?
நினைந்து, நெகிழ்ந்து, உணர்ந்து, அன்பே நிறைந்து, உச்சரிக்க வேண்டும்!

'எப்படிப் பாட வேண்டும்? ''வான் கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்'
என்பார் வள்ளல்! சும்மா கண் எங்கோ பார்க்க, மனம் எங்கோ திரிய வாய் அசைத்தால் மட்டும் போதாது. இறைவன் நாமத்தை உளத்தோடும், உயிரோடும், கலந்து ஒத வேண்டும்.

இறைவன் நாமத்தை ஒருவர் ஓதும் பொழுது கேட்பவர் நிலை எத்தகையதாக இருக்க வேண்டும்?
மீண்டும் வள்ளலார் பதில் தருகிறார்!
திருவாசகத்தை 'ஓதக் கேட்ட பொழுது அங்கிருந்த கீழ்ப் பறவைச் சாதிகளும்,வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டமுறும் என்னில் இங்கு நானடைதல் வியப்பன்றே.'

இறைவன் நாமத்தைக் கேட்டவுடன் மெய்ஞானம் அடைய ஆவல் பெருகுமாறு ஓத வேண்டும்.

''பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும், படிக்க பக்க நின்று கேட்டாலும்,
இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பு,' இறைவன். ( வள்ளலார்)

'அன்பருக்கு அன்பனே' என்கிறது திருவாசகம்.

'இறைவனோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே,' என்பது அவ்வை வாக்கு.

'பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தை சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்'
என அடியார்பெருமையைப் பாடுகிறார் சுந்தரர் தம் திருத்தொண்டத்தொகையில்.

அன்போடு இறைவன் நாமத்தை உச்சரிக்கக் கேட்கின்ற அன்பர்களுக்கும் அன்பர்கள் உள்ளார்கள்.
அவர்களுக்கும் நான் அன்பானாக அருள் புரிவாய் அருணாசலா.

'அருணாசல' என்ற ஐந்தெழுத்து நாமம்  ஓதுதற்கு எளியது. அருணாசல நாமத்தை ஓதினாலும்,  ஓதுவதைக் கேட்டாலும், மனதால் நினைத்தாலும் இறைவனுடைய அருளுக்குப் பாத்திரமாகலாம்.











No comments:

Post a Comment