16 August 2014

91. அருணாசல அட்சரமணமாலை

ராப்பகல் இல்லா வெறுவெளி வீட்டில்
ரமித்திடுவோம் வா அருணாசலா

இரவும் பகலும் இல்லாத இதய வெளி ஆத்மா எனப்படுகிறது. இந்த ஆத்மப் பரவெளி வீட்டில் நாம் இருவரும் இன்புற்றிருப்போம் அருணாசலனே, வருவாயாக.

தன்னிடத்தில் தன்னைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதை உணர்ந்த தவத்தினருக்கு இரவு பகல் என்ற பேதங்கள் இல்லை. அதையே 'வெறு வெளி வீடு,' என்பார். வெறு வெளி வீடே ஆத்மா. அது ஒன்றே!
'ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென இவை அன்றென விளங்கிய அருட்பெருஞ் சோதி'-
 அகவல்.  ஒன்றா, இரண்டா, இரண்டும் சேர்ந்த ஒன்றா என எவரும் அறியவியலா சக்தியே இறைவன்.
'நானாகித் தானாய் நடித்தருள்கின்றாய் அபயம்,' என்கிறது அருட்பா.

'அல்லும் பகலுமில்லாச் சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மா இருக்கப் போதாய் இனி மனமே,'
(கந்தரலங்காரம்,17)
மனதில் வஞ்சகமில்லாதவர் அடையும் பரவெளியில் நினைப்பும் மறப்பும் இல்லை, அங்கே சும்மா இருக்கும் சுகமே ரமித்தல்,' ஆகும்.

'போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும்
வாக்கும் வடிவும் முடிவும் இல்லாத ஒன்று வந்துவந்து
தாக்கும் மனோலயம் தானேதரும்................'கந்தரலங்காரம்,73
போக்கும்வரவும் அற்ற உனது திருவருள் துணைசெய்து மனோலயம் தந்து சொல்லொணா இன்பம் தருகிறது என்று ஆனந்திப்பார் அருணகிரிநாதர்.
இதையே, ராப்பகல் இல்லா வெறு வெளி வீட்டில் ரமித்திடுவோம் வா,' என்கிறார் ரமணர்.







No comments:

Post a Comment