13 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவாவடுதுறை

                                         - வீழும் பொய்
தீரா வடுவுடையார் சேர்தற்கு அருந்தெய்வச்
சீரா வடுதுறைஎம் செல்வமே -

பொய்க்கு அழிக்கும் தன்மை உண்டு.  வடு - எப்போதும் அழியாத அடையாளம் .  பொய் சொல்பவர்களை வடுவுடையார் என்கிறார் வள்ளலார். பொய் சொல்வார் இறைவனை அடைய முடியாதவர். கிடைத்தற்கரிய தெய்வச் செல்வமாய்  திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானை பொய்யுரைப்பார் அடையமாட்டார்.

கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் உள்ளது. இங்குள்ள நந்தி மிகப் பெரியது. திருமூலர், திருமந்திரம் அருளிய ஊர். தரும தேவதை இறைவனை வழிபட்டு அவருக்கு வாகனம் ஆனது.
சம்பந்தர் தன் தந்தையின் வேள்விக்காக பொற்கிழி பெற்றார். போகருடைய மாணவர் திருமாளிகைத் தேவர் பல அற்புதங்களை நிகழ்த்திய ஊர். சுந்தரர் உடற்பிணிதீர பிரார்த்தித்துக் கொண்ட தலம்.

இறைவன் : மாசிலாமணிநாதர்
இறைவி    : ஒப்பிலாமுலையாள்
தலமரம்     : படர் அரசு

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்  : அருட்பெருஞ் சோதி

''கிறிமொழிக் கிருதரை,'' எனத் தொடங்குகிறது ஒரு திருப்புகழ்.
கிறி என்றால் பொய். கிருது - செருக்கு, கர்வம், அகங்காரம்
அகங்காரம் மிக்கவர் வாய் கூசாமல் பொய் சொல்வர்.

நீதி வெண்பா என்ன சொல்கிறது?
ஆனந் தணர் மகளிர் அன்பாம் குழந்தைவதை
மானந் தரும்பிசித  வார்த்தையிவை - மேனிரையே
கூறவரும் பாவம் குறையாதொவ் வொன்றுக்கு
நூறதிக மென்றே நுவல்.

நூறு பசுக்களைக் கொன்ற பாவம் ஒரு அந்தணனைக் கொன்றால் வரும். நூறு அந்தணர்களைக் கொன்ற பாவம் ஒரு பெண்ணைக் கொன்றால் வரும்.நூறு பெண்களைக் கொன்ற பாவம் ஒரு குழந்தையைக் கொன்றால் வரும். நூறு குழந்தைகளைக் கொன்ற பாவம் ஒரு பொய் சொன்னால் வரும். எனவே பொய் சொல்லக் கூடாது.




No comments:

Post a Comment