25 March 2014

திருநீற்றுப் பெருமை

''வேலேந்திய முருகா, மயிலேறிய மணியே, ஆறாக்கரப் பொருளே, குமராசிவ குருவே, பாலாகதிர்வேலா, முகமாறுடை முதல்வா, கந்தாசிவன் மைந்தா, கண்ணா எமதண்ணா,''
என்றெல்லாம்  போற்றி குளிர் நீறணிந்தால் என்ன பயன்? ''புண்ணிய நீற்று மான்மியம்,''
என்ற தலைப்பில் வல்ளல் பெருமான் பத்து பாடல்களில் திருநீற்றின் பெருமையைக்
கூறுகிறார்.
ஒரு பாடலை பார்ப்போம்:

'சிந்தாமணி நிதிஐந்தரு செழிக்கும்புவ னமுமோர்
நந்தாவெழில் உருவும்பெரு நலனும்கதி நலனும்
இந்தாவெனத் தருவார்தமை இரந்தார்களுக் கெல்லாம்
கந்தாசிவன் மைந்தாவெனக் கனநீறணிந்திடிலே'

கந்தா, சிவன் மைந்தா எனச் சொல்லி பெருமை பெற்ற திருநீறை அணிந்து கொண்டால்
அணிபவர்களுக்கு என்ன கிடைக்கும்?

நினைத்ததை எல்லாம் தரும் அபூர்வமான சிந்தாமணியால் கிடைக்கப் பெறும் செல்வங்கள்,
அரிச்சந்தனம்,கற்பகம், சந்தானம்,பாரிஜாதம், மந்தாரம் எனச் சொல்லப்படும் ஐந்து தெய்வ மரங்கள்
வளரும் இந்திர உலகம், ஒப்பற்ற அழகு வாய்ந்த மேனி, சிறந்த நன்மைகள், நற்கதி இவற்றை
அடைவர். அதுமட்டுமா? தம்மிடம் வந்து யாசிப்பவர்க்கு எல்லாம் இந்தா, பெற்றுக் கொள் என வாரிவழங்கும் நல்லியல்பையும் பெறுவர்.

திருநீறு பசுஞ்சாணத்தில் இருந்து மிக மிகக் கவனமாகத் தயாரிக்கப் படுவதாகும். இந்த சுத்தமான திருநீற்றின் தண்ணீரை அருந்தாமல் உணவு உண்ணமாட்டார்கள் சிலர். இத்திருநீறு இருக்கும் இடம் தெரியாமல் நெற்றியிலே துலங்கும். காயங்கள், வலிகளை மாற்றும் தன்மை இதற்கு உண்டு என்பது
நிதர்சனமான உண்மை.

அருட்பெருஞ் சோதி தனிப்பெருங்கருணை!




No comments:

Post a Comment