19 March 2014

காணக்கிடைக்குமோ?

உலகில் மனிதர்களாய்ப் பிறந்த எல்லோருக்குமே பிரிவு என்று ஒன்று உண்டு.
பிரிந்தவர்களுக்கு மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற ஏக்கம் உண்டு. இது
உலக இயல்பு.
ஆனால் இறைவனிடம் பேரன்பு பூண்டு அவனைக் காண வேண்டும் என்று
துடித்தவர்களில் திருவள்ளல் பெருமானை விஞ்ச யாரும் இல்லை.
பாருங்களேன், பத்து பாடல்களில், 'இறைவனின் திருமுகத்தை, முக்கண்களை,
களத்தின் அழகை, பொற்றோளின் சுந்தரத்தை,பொன்னேர் இதழிப் புயத்தை,
திருவடிச்சீரை,செவ்வண்ண மேனித் திறத்தை,' காணப் பெற்றிலேன், என ஏங்கி
ஏங்கிப் பாடுகிறார். இறைவனது திருவுருவைக் கண்டு இன்பம் அடைய விரும்பி
அது நிறைவேறாமையால் மனம் வருந்தி வாடும் ஒருவர் பாடும் பாடலாக,'திருக்
காட்சிக்கு இரங்கல்,' என்ற தலைப்பில்  உள்ள பத்து பாடல்களில் ஒரு பாடலைப்
பார்ப்போம்.

மருள் ஆர்ந்த வல்வினையால் வன்பிணியால் வன்துயரால்
இருள் ஆர்ந்த நெஞ்சால் இடியுண்ட ஏழையனேன்
தெருள் ஆர்ந்த மெய்ஞ்ஞானச் செல்வச் சிவமேநின்
அருள் ஆர்ந்த முக்கண் அழகுதனைக் கண்டிலனே

இறைவனே! இன்றைக்கு என்னுடைய நிலை எவ்வாறு இருக்கிறது என்று தெரியுமா?
என் வினைப் பயன்கள் என்னை பயப்பட வைக்கின்றன.
துன்பம் தரும் நோய்கள், அதனால் வரும் துயரம்!
நோயும், துன்பமும் நிறைந்த உள்ளத்தில் ஒளி இருக்குமா?
இருண்டு போன நெஞ்சம்!
இவையெல்லாம் என்னை நாலாபக்கமும் மொத்துகின்றன.
நான் ஏழை. ஆனால் நீயோ தெளிவான ஞானச்செல்வமுடையவன்!
எனக்கு என்ன ஆசை தெரியுமா?
உன்னுடைய கருணை நிறைந்த முகத்தின் முக்கண்கள்! அதனால் அழகுமிளிரும்
உன் திருமுகம்!உன் முக அழகைப் பார்த்து இன்புற ஆசைப் படுகிறேன்.
என்னுடைய  எல்லாத்  துன்பங்களையும் நீக்கும் சக்தியுடையது  உன் திருமுகம்!
எனக்கு அருள் புரிவாயா?

எத்தனை பெரிய ஆசை? எவ்வளவு உரிமையோடு கேட்கிறார்! இறைவனைக் காணவேண்டும்
என்று விருப்பமுறுவது ஒரு வேள்வி!  நாமும் சற்று முயல்வோமா?

அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி!
தனிப் பெருங் கருணை அருட்பெருஞ் சோதி!











No comments:

Post a Comment