23 March 2014

போதும் என்று சொல் மனமே.........

ஆசைக்கு ஓர் அளவு இல்லை அகிலம் எல் லாம்கட்டி
ஆளினும் கடல் மீதிலே
ஆணைசெல வேநினைவர்; அளகேசன் நிகராக
அம்பொன் மிக வைத்தபேரும்
நேசித்து ரச வாத வித்தைக்கு அலைந்திடுவர்;
நெடுநாள் இருந்த பேரும்
நிலையாக வேனும் காயகற் பம்தேடி
நெஞ்சுபுண் ஆவர்;எல்லாம்
யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்
உறங்குவதும் ஆகமுடியும்;
உள்ளதே போதும் நான் நான் எனக் குளறியே
ஒன்றைவிட்டு ஒன்றுபற்றிப்
பாசக் கடற்குளே வீழாமல் மனதுஅற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்;
பார்க்கும் இடம் எங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூரணானந்தமே!

போதுமென்ற மனம் உடையவர்களை எங்கேனும் பார்க்கமுடியுமா?
ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றார் புத்தர். அனைத்திற்கும்
ஆசைப்படு, தவறில்லை என்கிறார்கள் இன்று!மண்,பெண், பொன்
ஆசைகளே மனிதனுக்கு தீமைதரும் என்பது ஆன்றோர் வாக்கு.
இந்த ஆசைகள் உலகம் தோன்றிய நாள் முதல் இருந்துவருகிறது.
அளவோடு ஆசைப்பட்டால்தான் நன்மை விளையுமோ?

தாயுமானவ சுவாமிகள் என்ன சொல்கிறார்? ஆசைக்கு அளவே இல்லை.
உலகம் முழுவதையும் ஆண்டாலும் கடலையும் ஆளவேண்டும் என
ஆசைப் படுகிறான் அரசன்.
குபேரனிடம் உள்ள அளவு செல்வம் இருந்தாலும் தாமிரத்தைத் தங்கமாக்கும்
ரசவாத வித்தையைத் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறான் செல்வந்தன்.

வயது முதிர்ந்து கிழப் பருவம் வந்தாலும் காயகல்பம் எங்கே கிடைக்கும்,
மரணமே இல்லாமல் வாழலாம் என்று தேடி அலைந்து நெஞ்சம் புண் ஆவர்.

யோசித்துப் பார்க்கும்போது இந்த வாழ்க்கையில் என்ன சாதனை புரிந்துள்ளோம்,
என ஆராயுமிடத்து, உண்டு உண்டு உறங்கி, நான் நான் எனவும், நான்செய்தேன்
எனப் பெருமையுற்றது தவிர வேறில்லை!
இறைவனே இந்த உலகப் பாசக் கடலுக்குள் வீழாமல் உள்ளதே போதும் என்ற
மனநிறைவைத் தருவாய்! மனமே அற்ற பரிசுத்த நிலையைத் தருவாய்.
பார்க்கின்ற இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணானந்தமே! சிவமே!










1 comment: