20 March 2014

என்ன தவம் செய்தேனோ?

நம் நாட்டில் நடக்கும் கோயில் திருவிழாக்களின் போது இறைவன், இறைவியரை ஊர்வலமாக எடுத்து வருவார்கள். இத்தகைய உற்சவங்களுக்காகவே 'உற்சவ மூர்த்தி,' எல்லாக் கோயில்களிலும் உண்டு. அழகாக அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் திரு உருவங்கள், பல்லக்குகள், அந்த அந்த தெய்வங்களுக்கு உரிய வாஹனங்களில் சங்கீதம் முழங்க திருவீதி உலாவரும். அவரவர் வீட்டு வாசலில் வரும் போது, தங்கள் வீட்டிற்கே வந்ததுபோல் தரிசனம் செய்து மகிழ்வார்கள்.
பெண் ஒருத்தி இந்த ஊர்வலத்தைப் பார்க்கிறாள். இறைவன் மீது பித்துக் கொண்ட பெண் அவள்.ஆகா என்ன தவம் செய்தேன் என்று தன்னை மறந்து இறைவனைப் போற்றித் துதிக்கிறாள். வள்ளல் பெருமான்
நாயகி பாவத்துடன் பாடியுள்ள பத்து பாடல்களில் ஒன்றைப் பார்ப்போம்.

வில்வத் தொடும்பொன் கொன்றைஅணி
வேணிப் பெருமான் ஒற்றிநகர்
செல்வப் பெருமான் சிவபெருமான்
தியாகப் பெருமான் திருஅழகைக்
கல்வைப் புடைய மனம்களிக்கக்
கண்கள் களிக்கக் கண்டுநின்றேன்
இல்வைப் புடையேன் அம்மாநான்
என்ன தவந்தான் செய்தேனோ.

 திருவொற்றியூரில்  சிவபெருமான் திருவீதி உலாவருகிறார். பெண்கள் எல்லோரும் வீதியில் நின்று தரிசனம் செய்கிறார்கள். காதலாகிக் கசிந்து பெண் ஒருத்தி சொல்கிறாள்,  எம்பெருமானைப்
பாருங்கள்! திருவொற்றிநகரில் கோயில் கொண்டவன், செல்வப் பெருமான், தியாகேசன் என்ற பெயருடையவன்.  அழகிய சடைமுடியில் பசுமையான வில்வமாலை அணிந்தது போதாதென்று,பொன் நிறமான கொன்றைமலர் மாலையும் அணிந்துள்ளான்.  அதுதான் எத்தனை அழகு!
சிவபெருமானின் திருவழகைக் கண்டு கல்போன்ற என் மனம் மகிழ்கிறது. கண்கள் களிக்கின்றன.
என்னால் பார்வையை விலக்கவும், இடம் பெயரவும் முடியவில்லை தெரியுமா? இல்லற வாழ்க்கை
வாழ்ந்து வரும் நான் திருவருட் தரிசனம் பெற என்ன தவம் செய்தேனோ? என்னுடைய தவப் பேற்றினால்தான் இது வாய்த்தது.

கோயில்களுக்குச் செல்லும் போதும், திருவிழாக்களின் போதும் மனம் இறைவனிடம் ஒருமைப்படுகிறது.
அமைதியும், ஆனந்தமும் அடைகிறது. அது ஒரு தனி அனுபவம்!

அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி! தனிப் பெருங்கருணை அருட்பெருஞ் சோதி!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

                                                         *******************************







No comments:

Post a Comment