22 March 2014

எங்குமுள்ள ஈசனார்!

இறைவா உன்னைக் காண வேண்டுமென்று என் மனம் அவாவுறுகிறது.  இறைவன் எங்குளான் என ஆன்றோரிடம் கேட்டேன். அவன் எங்குமுள்ளான், எதிலுமுள்ளான் என்கின்றனர். உன்னை எங்கும் எதிலும் தேடும் என் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

காரைக்கால் அம்மையார் சிவபெருமானிடம் மாறாத பக்தி உடையவர். விடியற்காலைப் பொழுதில் செக்கச் சிவந்து, வானமகளின் வண்ணஜாலங்கள் நிறைந்து கிடக்கும் ஆகாயத்தைப் பார்த்ததும் அவருக்கு சிவபெருமானின் திருமேனி நினைவுக்கு வருகிறது.''காலையே போன்றிலங்கும் மேனி,''
எனப் பரவசப் படுகிறார்.

பொழுது போகிறது. நண்பகல் நேரம்!கடல் அலைகள் சூரியக் கதிர்களின் அடர்த்தியால் வெண்மை படர்ந்து காணப்படுகிறது. அம்மையாருக்கோ சிவபெருமானின் திருமேனியில் பூசப்பட்ட வெண்ணீறு போலத் தோன்றுகிறது.''கடும்பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு,''

அந்திப் பொழுதும் வருகிறது. வானம் சூரியனின் அஸ்தமனத்தில் மீண்டும் வர்ணக்கலவையாகிறது.
திருமேனியும்,வெண்ணீறும் கண்ட கண்களில் அந்திப் பொழுது அவனின் மிளிர்கின்ற சடாமுடியை
நினைவு படுத்துகிறது.''மாலையின் தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை,'' என்கிறார்.

''மற்றவர்க்கு வீங்கிருளே போலும் மிடறு''-இரவுப் பொழுது. எங்கும் இருள். இந்த இருள் கூட சிவனின்
கரிய நஞ்சுண்ட திருக்கழுத்தை நினைவு கூறுகிறது. நீலகண்டம்!

காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு -மாலையின்
தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு.

காலையும்,மதியமும், மாலையும், இரவும் சிவபெருமானைச் சிந்தையில் கொண்டு அவனை எப்போதும்,எதிலும் காண்கின்ற அம்மையாரின் பக்தி நம்மையும் ஆட்கொள்கிறது அல்லவா?






1 comment:

  1. மற்றவற்கு
    வீங்கிருளே போலும் மிடறு ஏன் "மற்றவர்க்கு" என்று சொன்னார்? சற்று விளக்க முடியுமா?

    ReplyDelete