21 March 2014

முருகப் பெருமான்- தரிசனம் வேண்டுமா?


சீர்கொண்ட தெய்வ வதனங்க ளாறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களுமோர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியுமருட்
கார்கொண்ட வண்மைத் தணிகாசலமு மென் கண்ணுற்றதே

ஶ்ரீராமலிங்க அடிகள் தம் இல்லத்து மாடிஅறையில் முருகப் பெருமானை வழிபடுவது வழக்கம்.
அவருக்கு கண்ணாடியில் முருகப் பெருமான் தரிசனம் அளித்தார். அப்போது பாடிய பாடல்களில்
ஒன்று இது.
வள்ளல் பெருமானுக்கு எப்படிக் காட்சி அளித்தான் முருகன்?

கார்மேகங்கள் உலாவரும்
செழிப்பு மிக்க தணிகை மலை, கண்முன்னே!
மயில் வாகனம்,
அதன் மீது
தெய்வீக ஒளி பொருந்திய ஆறு முகங்கள்
நறுமணம் வீசும் கடப்பமலர் மாலை அணிந்த
பன்னிரு தோள்கள்,
தாமரைமலர் போன்ற திருவடிகள்.
கையில் பகைவரை அழிக்கும் கூர்மையான வேல்,
கோழிக்கொடி!
ஆகா, முருகன், அழகன், குமரன், குகன்,சரவணன்,
சண்முகன் கண்முன்னே! பேசவும் கூடுமோ?
கண்ணுற்றதே.......

திருத்தணிகை முருகப் பெருமான் திருவருட் காட்சியை படம் பிடித்துக் காட்டும் வள்ளல்
பெருமான் மலரடிகளுக்கு வந்தனங்கள்.



No comments:

Post a Comment