Showing posts with label சிவநேச வெண்பா - வள்ளலார். Show all posts
Showing posts with label சிவநேச வெண்பா - வள்ளலார். Show all posts

17 March 2014

எப்பொழுது நீ எனக்கு அருள்வாய்?

இன்றோ பகலோ இரவோ வருநாளில்
என்றோ அறியேன் எளியேனே - மன்றோங்கும்
தாயனையாய் நின்னருளாம் தண்ணமுதம் உண்டுவந்து
நாயனையேன் வாழ்கின்ற நாள் --சிவநேச வெண்பா

மன்றோங்கும்- அம்பலத்திலே சிறந்து விளங்கும்
தாயனையாய் - அன்னையைப் போன்றவனே
நின்னருளாம் தண்ணமுதம் -உன்னுடைய திருவருளாகிய அமிழ்தத்தை
உண்டு வந்து -( உண்டு உவந்து) உண்டு மகிழ்ந்து
நாயனையேன் வாழ்கின்ற நாள் - நாயனையேன் உன் அருளினால் நல்வாழ்வு வாழ்கின்ற நாள்
இன்றோ, பகலோ, இரவோ, வருநாளில் - இன்றைக்கோ, பகல்போதோ, இரவுப் பொழுதோ
என்றோ அறியேன் எளியேனே - என்று வருமோ அறியேன்.

அம்பலத்தாடும் ஐயனே, தாயனையானே, உன் திருவருள் அமிழ்தத்தை உண்டு மகிழ்ந்து வாழ்கின்ற நாள் என்று வரும்? இப்போதா, பகலிலா, இரவிலா இல்லை வேறு எப்போதா என்று எளியவன் அறிய மாட்டேன். தெரிவித்து அருள் புரிவாயாக!
இறைவனின் திருவருட் பேறு கிடைக்காத நாட்கள் எல்லாம் வீணான நாட்களே!