Showing posts with label திருவருட்பா.. Show all posts
Showing posts with label திருவருட்பா.. Show all posts

25 August 2014

105. அருணாசல அட்சர மணமாலை

105. என் போலும் தீனரை இன்புறக் காத்துநீ
         எந்நாளும் வாழ்ந்தருள் அருணாசலா!

எந்நாளும் என்போன்ற எளியவரை இன்பமடையும்படிக் காத்து வாழ்ந்து அருள் புரிவாயாக.
ஶ்ரீரமணரைப் போன்று தன்னை உணர்ந்து தன் மயமானவர்கள்,  அகந்தையற்றவர்களாதலின்
தற்பெருமையற்றவர்கள். எனவே 'என் போலும் தீனரை' என்று தன்னையும் அடியார் கூட்டத்தில் ஒருவர் ஆக்கினார். அடியாருக்கும் எனக்கு அருளியது போல 'தன்னை அறியும்'  விழிப்புணர்வை அருள்வாய்.

106. என்பு உருகு  அன்பர்தம் இன்சொல்கொள் செவியுமென்
          புன்மொழி  கொளஅருள் அருணாசலா

ஆன்றோர்களின் எலும்பையும் உருகச் செய்யும் அன்பு நிறைந்த இனிய சொற்களைக் கேட்கும் செவிகள்!
இன்சொல் கேள் ''தோடுடைய செவிகள்!''
''அன்பர் மொழித் தேன் பரவும் வள்ளைச் செவியழகு'' என்பார் வள்ளலார்.

இத்தகைய உன் செவி என் புன்மொழிகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்! இது வெளிப்படையான
கருத்து. ஆனால் இதன் உட்பொருள் என்ன?

அட்சரங்களால் தொடுக்கப்பட்ட இம்மணமாலை புன் மொழியாகுமா? தன்னைத் தான் அறிய,
வழி காட்டும் 'மறையாக' அல்லவா மணமாலை விளங்குகிறது!
இம்மணமாலையை அன்பர்களும் படித்து என்புருகி அருணாசலனின் அருளுக்குப் பாத்திரமாக வேண்டும்
என்பதே இப்பாடலின் கருத்தாகும்.
தன்னடக்கம் என்பது யோகிகள் அணியும் மணிமகுடம்.