Showing posts with label வள்ளலார் - ஆனந்தானுபவம் -பாதமலர்ப் பெருமை.. Show all posts
Showing posts with label வள்ளலார் - ஆனந்தானுபவம் -பாதமலர்ப் பெருமை.. Show all posts

19 April 2014

பாதமலர்

தாதையாம் என்னுடைய தாயாம்என் சற்குருவாம்
மேதையாம் இன்ப விளைவுமாம் - ஓது
குணவாளன் தில்லைஅருட் கூத்தன் உமையாள்
மணவாளன் பாத மலர்

என்னுடைய தந்தையும், தாயும், சற்குருவும், ஞானமுதல்வனும் யார்? எனக்கு இன்பமளிக்கும் பொருளாகி விளங்குவது எது?

பெரியோர்கள் எடுத்துச்சொல்லும் எட்டு வகை நற்குணங்களைஉடையவன்,
தில்லைச் சிதம்பரத்தில் அருளாகிய கூத்தால் அன்பர்களுக்கு ஆனந்தத்தை அருள்பவன்,
மலைமகளாகிய உமையம்மையின் மணவாளன்.
அவனுடைய திருவடித் தாமரைகள், திருப்பாத மலர்களே எனக்கு அனைத்தும் ஆகும். அத்திருவடிகளில் சரண்புகுந்தேன்.
ஐந்து அங்கங்களும் தரையில் படுமாறு வீழ்ந்து வணங்கும்போது, இறைவனின் திருவடிகளை தரிசிக்கும் போது கிடைக்கும் ஆனந்தத்திற்கு ஈடு இணை ஏது? நிஜமாகவே அப்பாத மலர்களின் தரிசனம் கிடைக்கப் பெற்றால்? கிடைக்கும்!

'ஆனந்தானுபவம்,' என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளன பத்து பாடல்கள்.
வள்ளல் பெருமான் இறைவனின் தரிசனம் பெற்ற ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது, சிவபெருமானின் பாதமலர் என்று சொல்லாமல்,
'உமையாள் மணவாளன் பாதமலர்,
சிவகாமவல்லி மகிழ் மாப்பிள்ளை பாதமலர்,
சிவகாம சுந்தரியை மாலை இட்டான் பாதமலர்,'
என்றெல்லாம் போற்றிப் புகழ்ந்து நம்மையும் பரவசப்படுத்துகிறார்.