31 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமால் பேறு
                                    - சொல்லரிக்குக்
காற்பேறு கச்சியின்முக் காற்பேறு இவண்என்னும்
மாற்பேற்றின் அன்பர் மனோபலமே -

"திருமால்பூர்" என வழங்கப்படும் இவ்வூர் காஞ்சிபுரம் - அரக்கோணம்  ரயில் பாதையில் உள்ளது.
திருமால் கோயில்களுக்கு பெயர் பெற்றதலம் காஞ்சி. அங்கே உலகளந்த பெருமாள் கோயில் உள்ளது.
அதை நினைவில் கொண்டு, "சொல் அரிக்கு கச்சியின் காற் பேறு," என்றார். காஞ்சியில் உலகளந்த
பெருமாளாய் 'கால் பங்கு' பெருமை பெற்றார் திருமால். " திருமாற் பேறு," என்ற இத்தலத்தில் மீதமுள்ள 'முக்கால் பங்கு' பெருமை கிடைத்ததாம்! அதனால் 'முக்காற்பேறு' இவண்- என்றார். இவண் என்பது - திருமால் பேறு - என்ற இடம். முக்கால் பேறு எப்படிப் பெற்றார்?

திருவீழிமிழலை என்ற தலத்திற்குரிய வரலாறு இங்கும் கூறப்படுகிறது. திருமால் ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சித்து சிவபெருமானை வழிபடும் போது ஒரு நாள் ஒருமலர் குறைய தன் கண்மலரை
அர்ப்பணித்து தன் சக்ராயுதத்தைப் பெற்றதாகவும் அதனால் 'முக்கால் பேறு' பெற்றதலம் "திருமாற்பேறு"எனவும் குறிப்பிடப்படுகிறது.  இவ்விடத்தில் சிவபெருமான் அன்பர்களுக்கு மனவலிமை தருபவனாய் வீற்றிருக்கிறான். இறைவன் பெயர் மால்வணங்கீசர்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி












30 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவல்லம்
                         - பார்த்துலகில்
இல்லம் எனச்சென்று இரவாதவர் வாழும்
வல்லமகி ழன்பர் வசித்துவமே -

பரந்த இவ்வுலகில்  இல்லந்தோறும் சென்று, இல்லை எனக் கையேந்தி நிற்காதவர்கள் வாழும் சிறப்புப் பொருந்திய ஊர் வல்லம்.  இங்கே பக்தர்கள் ஆனந்தமாக வசித்து இறைவனை வழிபடுகின்றனராம். ஆச்சரியம்தானே?
அபிராமி பட்டர் பாடுகிறார், 'இல்லாமை சொல்லி ஒருவர்தம் பால்சென்று' நிற்காமல் எத்தனை உன்னதமான இடத்தில் என்னை வைத்திருக்கிறாய் என்று இறைவனின் பாதங்களைப் போற்றுகிறார்.

அருணகிரி நாதரின் பாடல் பெற்ற இத்தலம் வேலூர் மாவட்டத்தில் உள்ளது.
சுமார் 2000 ஆண்டு பழமை வாய்ந்த இத்தலம் தேவாரப் பாடல் பெற்றது. அம்மையப்பன் தான் உலகம் என விநாயகர் வலம் வந்தததை உணர்த்தியதால்  திருவலம். தற்போது திருவல்லம் என மருவியது.
சுயம்புலிங்கம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி 

29 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்


வன்பார்த்தான் பனங்காட்டூ 
                                           - பூத்தவிசின்
ஆர்த்தான் பனகத்த வனிந் திரன் புகழ்வன்
பார்த்தான்  பனங்காட்டூர் பாக்கியமே -

'பூத் தவிசின் ஆர்த்தான்/ பனகத்தவன்/ இந்திரன்/ புகழ்' --பூத்தவிசு-தாமரைமலர், பனகத்தவன் -திருமால் (பன்னகம்- பாம்பு)
தாமரை மலரில் அமர்பவனாகிய பிரமனும், பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும், இந்திரனும்
புகழ்கின்ற 'வன்பார்த்தான் பனங்காட்டூரில்' எழுந்தருளியிருக்கும் செல்வமே சிவபெருமானே!

இவ்வூர் திருப்பனங்காடு என்று வழங்கப்படுகிறது. பனைமரங்கள் நிறைந்த தலமாய் இருந்திருக்க வேண்டும். அகத்தியர் வழிபட்ட தலம். இறைவன் -பனங்காட்டீசர், தலமரம் - பனை.

திருவருட்பிரகாச வள்லலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி







28 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

என்னுள்ளே மறைந்து கொண்டு உன்னை எங்கும் தேடச் செய்கின்றாய்.
உன்னை என்னுள் தேடித் தேடிக் களைத்தேன் எம்பெருமானே!
நீ மனம் வைத்தால்தான் உன்னை அறிய முடியும் என அறிந்தேன்.

                             திருவோத்தூர்
                                                  - ஓகையிலா
வீத்தூர மாவோட மெய்த்தவர்கள் சூழ்ந்த திரு
ஓத்தூரில் வேதாந்த உண்மையே -

இறைவன் வேதத்திற்குப் பொருள் கூறிய இடம் என்பதால் 'ஓத்தூர்' ( ஓதும் ஊர் ) என்ற பெயர் வந்தது.
தவ வாழ்க்கையை மேற்கொள்வது என்பது எல்லோராலும் இயலாத ஒன்று. அது கட்டுப்பாடான நெறிமுறைகளைக் கொண்டது. அவ்வழியைப் பின்பற்ற முடியாதவர்களின் மன வலிமை அழிய, மகிழ்ச்சி
தூரஓடுகிறது. வேதங்களுக்கு பொருள் கூறிய இறைவன் எழுந்தருளியுள்ள திருவோத்தூர் இறைவனை மெய்யான தவம் செய்யும் வலிமை உடையவர்கள் சூழ்ந்திருக்கின்றனர்.

இவ்வூர் ஆலயம் செய்யாற்றின் வடகரையில் உள்ளது. இறைவன் - வேதபுரீஸ்வரர்.
இறைவி - திரிபுவனநாயகி.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி






27 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

மாகறல்
                                      - தோயுமன
யோகறல் இலாத்தவத்தோர் உன்ன விளங்குதிரு
மாகறலில் அன்பர்அபி மானமே -

(தோயும் மனம் யோக அறல் இலா தவத்தோர்) யோகம் என்றால் ஒன்று சேர்தல் என்று பொருள். மனமானது இறைவனுடன் தோய்தல், அதாவது இரண்டறக் கலத்தல்- ஒருமைப் படுதல். அதுவே யோகம். தவம் செய்வோர் அந்நிலையிலிருந்து நீங்குவது இல்லை. அத்தகையவர் வாழ்வதால் சிறப்புப் பெற்று விளங்கும்  'மாகறல்' என்னும் தலத்தில் அன்பர்களுக்கு அன்பனாய் விளங்குகிறான் சிவபெருமான்.

செய்யாற்றின் கரையில் உள்ள தலம். சுயம்பு மூர்த்தி. திங்கள் தரிசனம் சிறப்பு. இறைவன் பெயர்
அடைக்கலங்காத்த நாதர்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

26 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

அழகிய பொன்னம்பலத்தின் நடுவே ஞான இன்பக்கூத்தை நிகழ்த்தும் பெருமானே
நின் திருமுகத்தில் விளங்கும் இளமுறுவல் நகையைக் கண்டு மகிழ்ந்தேன்.

குரங்கணில் முட்டம்
                                - முச்சகமும்
ஆயுங் குரங்கணில் முட்டப்பெயர் கொண்டோங்கு புகழ்
ஏயும் தலம் வா ழியல்மொழியே -

காஞ்சிபுரத்திற்குத் தெற்கே பாலாற்றின் தென் கரையில்  'தூசி' என்ற கிராமம் உள்ளது. அங்கிருந்து 2 கி. மீ தொலைவில் உள்ளது இவ்வூர். குரங்கு வடிவில் வாலியும், அணில் வடிவில் இந்திரனும், காக(முட்டம்) வடிவில் எமனும் வழிபட்ட தலமாதலால் (குரங்கு+ அணில் +முட்டம் ) குரங்கணிமுட்டம்.
இதன் பழைய பெயர் பல்லவபுரம்.

வள்ளல் பெருமான் சொல்வது என்ன? மூவுலகத்தில் இருப்பவர்களும் இந்த ஊரின் பெருமையை
ஆராய்ந்து காண முயல்கின்றனராம். உயர்ந்த புகழ் விளங்கும் குரங்கணிமுட்டத்தில் இயற்றமிழ் வல்லானாக விளங்கும் இறைவனே வாழ்க.
திருஞானசம்பந்தர் இத்தலத்தை தக்கராகப் பண்ணிசையில் பாடியுள்ளார்.
'சூலப்படையான் விடையான் சுடுநீற்றான்
காலன்தனை ஆருயிர் வவ்விய காலன்
கோலப் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டத்து
ஏலங்கமழ் புன்சடை எந்தைபிரானே'

இறைவன் பெயர் -வாலீஸ்வரர். இறைவி- இறையார் வளையாள்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி



25 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

கச்சி நெறிக் காரைக்காடு
                                              - மங்காது
மெச்சி நெறிக்கார்வ மேவிநின்றோர் சூழ்ந்ததிருக்
கச்சி நெறிக்காரைக்  காட்டிறையே -

சிவபெருமானை வழிபட மிகவும் விரும்பி, ஆகம வழி முறைகளை  விதிப்படி அறிந்து, பின்பற்றும் ஆர்வலர்கள் சூழ்ந்து  போற்றும் கச்சிநெறிக்காட்டில் வீற்றிருக்கும் சிவபெருமானே உம்மை
வணங்குகிறேன்.

காஞ்சியில் உள்ள ஐந்து பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. காஞ்சியின் வட கிழக்கில் புன்செய்
காட்டில் இக்கோயில் உள்ளது. திருக்காலிமேடு, எனவும் வழங்கப்படும். இறைவன் காரைத் திருநாதர்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி